வியாழன், 22 ஆகஸ்ட், 2013

 ஆசிரியர் தகுதி தேர்வு: விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய டெல்லியில் இருந்து நிபுணர் குழு


 ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள்களை டெல்லிக்குழுவினர் வந்து மதிப்பீடு செய்ய உள்ளனர். ஒரு மாதத்திற்குள் தேர்வு முடிவை வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமாக உள்ளது. 
ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த 17–ந்தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் –1 நடைபெற்றது. 18– ந்தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள்–2 நடைபெற்றது. இந்த தேர்வுகளை மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். 
தேர்வு முடிந்ததும் வினாத்தாள்கள் பண்டல் பண்டலாக சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கொண்டு வரப்பட்டன. இப்போது அந்த விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடைபெறுகிறது. இந்த பணியை கம்ப்யூட்டரில் நிபுணத்துவம் வாய்ந்த குழுவினர் செய்து வருகிறார்கள். 
இந்த பணி எப்போது முடியும்? தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும்? என்று கேட்டதற்கு அதிகாரி ஒருவர் கூறியதாவது:– 
ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள்கள் மலை போல உள்ளன. அந்த விடைத்தாள்களை மிகக்கவனமாக அப்படியே ஸ்கேன் செய்யும் பணியை தனியாக ஒரு குழுவினர் செய்து வருகிறார்கள். இந்த வேலை முடிய எப்படியும் 3 வாரங்கள் நீடிக்கும். அதற்குள்ளாக இன்னும் ஒரு வாரத்தில் ஆசிரியர் தகுதிதேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையை( கீ–ஆன்சர்) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த விடைகளில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் தெரிவிக்கலாம். அல்லது தபால் மூலம் தெரிவிக்கலாம். தகுந்த விடை இதுதான் என்னும் கருத்தை அனுப்பலாம். இவை எல்லாம் சரி செய்யப்பட்டு இறுதி விடை இணையதளத்தில் வெளியிடப்படும். பின்னர் அந்த விடையைக்கொண்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும். இதற்காக டெல்லியில் இருந்து நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவினர் சென்னை வர உள்ளனர். விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு 30 நிமிடம் போதுமானது. எப்படியும் ஒரு மாதத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியிடப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Source :தினத்தந்தி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக