வெள்ளி, 27 செப்டம்பர், 2013

தமிழகத்தில்செயல்படும் 44 மாதிரிப் பள்ளிகளில் நேர்மை அங்காடிகள்

 மாணவர்களிடம் நேர்மை, நாணயம் உள்ளிட்ட பண்புகளை வளர்ப்பதற்காக
யாருடைய மேற்பார்வையும் இல்லாத நேர்மை அங்காடிகள் காந்தியடிகளின்
பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில்செயல்படும் 44 மாதிரிப் பள்ளிகளில் நேர்மை அங்காடிகள்
தொடங்கப்படுகின்றன. முதல்கட்டமாக மாதிரிப் பள்ளிகளிலும் பிறகு, அனைவருக்கும் இடைநிலைக்
கல்வித் திட்டம் செயல்படும் அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம்விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.
 இது தொடர்பாக அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் -அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் ஏ.சங்கர்வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அனைத்து மாதிரிப் பள்ளிகளிலும் நேர்மை அங்காடிகள் தொடங்கப்படவேண்டும். இந்த நேர்மை அங்காடிகளில் மாணவர்களுக்குத் தேவையானஎழுதுபொருள்கள் அவற்றின் விலையைக் குறிப்பிட்டு வைக்கப்பட்டிருக்கும்.இவற்றில் தங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு,
அதற்கான தொகையை மாணவர்களே பணப்பெட்டியில் செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாதிரிப் பள்ளித் தலைமையாசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். கடையின் ஆரம்ப முதலாக ரூ.500-ஐ பள்ளி மேலாண்மை நிதியிலிருந்து பயன்படுத்திக்கொள்ளலாம். பாதுகாப்பான ஒரு அறையை தேர்வு செய்து கடையை நடத்த வேண்டும். மாணவர்களுக்குள்ளேயே நபர்களைத் தேர்வு செய்து கடையை வழிநடத்த வேண்டும். எழுதுபொருள்களை மட்டுமே இதில் விற்பனை செய்ய வேண்டும். உணவுப் பொருள்களை கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது. விலைப்பட்டியலை கடையின் முன் தெளிவாக வைக்க வேண்டும். இந்தக் கடைகளில் வாங்கிய விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும். இதை தலைமையாசிரியர் கண்காணிக்க வேண்டும். தினசரி விற்பனை விவரத்தை இறைவழிபாட்டுக் கூட்டத்தில் படித்துக்காட்ட
வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

 மாதிரி நாடாளுமன்றம்: நமது நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்பாகமாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகமாதிரி நாடாளுமன்றத்தை பள்ளிகளில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளியில் இந்த மாதிரி நாடாளுமன்றம்
பல ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பள்ளியின்தலைமையாசிரியரிடமிருந்து மாதிரிப் பள்ளிகளில் மாணவர்களைக்கொண்டு  நாடாளுமன்றம் அமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகள்ஆலோசனை நடத்தினர். அதன்படி, மாணவர்களில் இருந்தே மக்களவைஉறுப்பினர்களும், அவர்களில்இருந்து எதிர்க்கட்சித் தலைவர், மக்களவைத் தலைவர், பிரதமரும்  தேர்ந்தெடுக்கப்படுவர்

.    இதன்மூலம் நாடாளுமன்ற விவாதங்கள், சட்டங்களை நிறைவேற்றுதல்,வாக்கெடுப்பு உள்ளிட்டவற்றை மாணவர்கள் நேரடியாகத் தெரிந்துகொள்வர்என அதிகாரிகள் தெரிவித்தனர். இதோடு மாதிரிப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சிகள், அறிவியல்விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் நடத்தப்படும். மாதிரிப்பள்ளிகளில் கற்பித்தலில் பல்வேறு புதிய வகைகளும் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக