திங்கள், 30 செப்டம்பர், 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு : முதல்வர் அறிவிப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக
ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

இது குறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட
வேண்டும்; பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள
ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட
வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்
திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனை
 அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத்
துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர்
உத்தரவிட்டார். 
அவர்களும் இது குறித்து மூன்று கட்டபேச்சுவார்த்தையை நடத்தினார்கள். இந்தச் சூழ்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் ஒரு விரிவான ஆய்வுக்
கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள்
மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக
விவாதிக்கப்பட்டது. விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், மாற்றுத்
திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும்
நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 
அதில், படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 
எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக
ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
நடத்தப்படும்.  இத்தேர்வில் தகுதி பெறும் பட்டதாரிகள் தற்போதுள்ள
பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் (Backlog Vacancies) மற்றும்
இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர். 
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில்
உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க
பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு  சிறப்புப்
பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும். 

முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள
பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப்
பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில்
தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர். தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில 
அளவிலான தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப் பட்டம் பெற்ற
பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப்
பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப்
பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம்
நடவடிக்கை எடுக்கும். இந்த நடவடிக்கைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியையும்,தன்னம்பிக்கையையும் உருவாக்க வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக