வெள்ளி, 22 நவம்பர், 2013

தகவல் அறியும் உரிமை :விண்ணப்பதாரர் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தகவல் பெறலாம்

ஆர்.டி.., என்ற, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியாக, அரசு தொடர்பான விஷயங்கள் பலவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சமூக ஆர்வலர்கள், தாக்கப்படுவதும், தொந்தரவுக்கு உள்ளாவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஊழலுக்கு எதிராக போராடுபவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இவ்வாறு, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான, அவிஷேக் கோயங்கா, மத்திய அரசு துறை ஒன்றிற்கு, தன் பெயர், முகவரியை தெரிவிக்காமல், தபால் பெட்டி எண்ணை மட்டும் குறிப்பிட்டு, தகவல்களை அளிக்கும்படி கேட்டிருந்தார். ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

பொது நல மனு:'பெயர், முகவரி இருந்தால் தான் தகவல் அளிக்கப்படும்' என அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அவிஷேக் கோயங்கா, கோல்கட்டா ஐகோர்ட்டில், பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அவர் கூறியதாவது:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், விண்ணப்பிக்கும் ஒருவர், தன் உயிரை பாதுகாத்து கொள்ளும் வகையில், தபால் பெட்டி எண்ணை பயன்படுத்தலாம், என, ஆர்.டி.., சட்டத்தில் வழி உள்ளது.

கண்டுகொள்வது இல்லை:ஊழல் முறைகேடுகளில் சிக்கியவர்கள், அரசியல்வாதிகள், தங்களை பற்றிய தகவல்களை வெளிவர விரும்புவதில்லை. இந்த தகவல்களை வெளிக்கொணர காரணமானவர்கள் மீது வன்முறை தாக்குதலை ஏவிவிடுகின்றனர்.கடந்த ஆறு ஆண்டுகளில், பெயர் மற்றும் முகவரியை கொடுத்த, ஆர்.டி.., ஆர்வலர்கள், 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 52 பேர் தாக்கப்பட்டுள்ளனர்; 74 பேர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர்.
ஆர்.டி.., ஆர்வலர்கள், கொல்லப்பட்ட பிறகோ, படுகாயம் அடைந்த பிறகு தான், மீடியாக்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மிரட்டல் இருப்பதாக, சம்பந்தப்பட்ட, ஆர்.டி..,, ஆர்வலர்கள் புகார் அளித்தால், அதை போலீசார் கண்டு கொள்வது இல்லை; அதன் மீது நடவடிக்கையும் எடுப்பது இல்லை. எனவே, விண்ணப்பதாரர்கள், தங்கள் பெயர், முகவரியை குறிப்பிடாமல், தபால் பெட்டி எண்ணை மட்டும் குறிப்பிட்டால், அதற்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

நிராகரிக்க கூடாது:இந்த மனு, கோல்கட்டா ஐகோர்ட் தலைமை நீதிபதி, அசிம் குமார் பானர்ஜி , நீதிபதி, தேபாங்சு பசாக் ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கூறியதாவது:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல்களை கோரும் விண்ணப்பதாரர்கள், தங்கள் பாதுகாப்பு கருதி, பெயர், முகவரியை குறிப்பிடாமல், தபால் பெட்டி எண்ணை குறிப்பிடலாம். தகவல் தரும் அதிகாரிகள், இதை நிராகரிக்க கூடாது.
இந்த உத்தரவு, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு மட்டும் பொருந்தும்; மற்ற மாநிலங்கள் இந்த உத்தரவை பின்பற்றலாம். ஆனால், கட்டுப்படவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை.இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர். இந்த உத்தரவு, ஆர்.டி.., ஆர்வலர்களுக்கு, உத்வேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக