புதன், 20 நவம்பர், 2013

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை: கல்வி துறை செயலர் விளக்கம்

''குறிப்பிட்ட அரசு வேலைக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால், அவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில், உரிமை கோரலாம்,'' என, பள்ளி கல்வித் துறை செயலர், சபிதா தெரிவித்தார்.

முன்னுரிமை அளிக்க: முந்தைய தி.மு.., ஆட்சியில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீதம் ஒதுக்கீடு செய்து, உத்தரவிடப்பட்டது. எனினும், பெரும்பாலான அரசு பணிகளுக்கான கல்வி தகுதியை, தமிழ் வழியில், படிக்க முடியாத நிலைமை தான் உள்ளது. பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களில், பலர், தாங்கள் தமிழ் வழியில் படித்ததாக கூறி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர். மேலும், தமிழ் வழி கல்வித்தகுதி குறித்து, பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இது தொடர்பாக, விண்ணப்பத்தாரர்கள் பலர், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் (டி.ஆர்.பி.,) வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். தமிழ் வழியிலான கல்வித்தகுதி எனில், '10ம் வகுப்பில் துவங்கி, பணிக்கு உரிய கல்வித்தகுதி வரை, அனைத்திலும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்' என, முதலில், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், 'குறிப்பிட்ட பணிக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதும்' என, பின்னர் தெரிவித்தனர். எனினும், இந்த விவகாரத்தில், தற்போது வரை, குழப்பம் நிலவி வருகிறது.


இது குறித்து, பள்ளி கல்வித் துறை செயலர், சபிதா கூறியதாவது: தமிழ் வழியில் படித்தவர்கள், 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், அரசு வேலை பெறுவதற்கான வழி முறைகளில், தமிழக அரசு, தெளிவான அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆனாலும், தேவையில்லாமல், இதில், பலரும் குழம்பி வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் பணி எனில், இளங்கலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதும். 10ம் வகுப்பையும், பிளஸ் 2 படிப்பையும், ஆங்கில வழியில் படித்திருந்தாலும், கவலையில்லை. அதேபோல், முதுகலை ஆசிரியர் பணி எனில், குறிப்பிட்ட பாடத்தில், முதுகலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்; அவ்வளவு தான்.


பிளஸ் 2 கல்வித்தகுதி உடைய அரசு பணி எனில், பிளஸ் 2 படிப்பை, தமிழ் வழியில் படித்திருந்தாலே போதும். கல்லூரிகளில், ஆங்கில வழியில் சேர்ந்து படிக்கும் மாணவர், தேர்வை, தமிழ் வழியில் எழுதுகின்றனர். இதை வைத்து, 'தமிழ் வழியில் படித்திருக்கிறேன்' என, கூறுகின்றனர். எந்த, 'மீடியத்தில்' சேர்ந்திருக்கின்றனரோ, அது தான், கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்
நன்றி : தினமலர் நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக