ஞாயிறு, 29 டிசம்பர், 2013

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முரண்பாடு: தமிழ், ஆங்கில, வணிகவியல், பொருளாதார பாடங்களில் பாரபட்சம்


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்கல்வித்தகுதி பெற்றருந்தால் காலியிடங்களுக்கு ஏற்பகுறிப்பிட்ட ஆண்டுகளில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. ஆசிரியர் பணியில் 50 சதவீத இடங்கள் நேரடியாகவும், 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில், முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள். முதுகலை ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரையில், நேரடி நியமனம் என்றால் இளநிலை, முதுகலை இரண்டு பட்டப் படிப்பிலும் குறிப்பிட்ட பாடத்தைப் படித்து பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், பதவி உயர்வு நியமனத்தில், பி.எட். தகுதியுடன் சம்பந்தப் பட்ட பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் போதும். பட்டப் படிப்பில் அவர்கள் எந்த படிப்பும் படித்திருக்கலாம் (கிராஸ் மேஜர்). உதாரணத்துக்கு பி.எஸ்சி. இயற்பியல் பட்டம் பெற்ற அறிவியல் ஆசிரியர் எம்.ஏ. ஆங்கிலம் படித்திருந்தால் அவர் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்.

இந்த பதவி உயர்வில், அறிவியல் படிப்புகளுக்கு (இயற்பியல், வேதியி யல், விலங்கியல்) மற்றும் கணித படிப்புக்கு கிராஸ் மேஜர் அனுமதி இல்லை. ஆனால், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் கிராஸ் மேஜர் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்குகிறார்கள். வணிகவியல், பொருளாதார முதுகலைப் பாடங்களில் 3:1 என்ற விகிதாச்சாரமுறையும் கடை பிடிக்கப்படுகிறது.

அதாவது, 3 இடங்கள் கிராஸ் மேஜர் பட்டதாரிகளுக்கும் ஒரு இடம் இளங்கலை, முதுகலை இரண்டும் ஒரே பாடத்தில் படித்தவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களில் 1:1 விகிதாச்சாரத்தை பின்பற்று கிறார்கள். ஒரு காலியிடம் கிராஸ் மேஜர் பட்டதாரிக்கும் ஒரு இடம் இளநிலை, முதுகலை இரண்டிலும் தமிழோ அல்லது ஆங்கிலமோ படித்தவர் களுக்கும் ஒதுக்கப்படுகிறது. இதனால், ஒரே பாடத்தில் இளநிலை, முதுகலை பட்டங்களை பெற்ற ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

கணக்கு,அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் பாடப்பிரிவில்   முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடன்களுக்கு  பதவி உயர்வு பலனை முழுமையாக  அனுபவிப்பதுடன்   தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல்   பாடங்களிலும் பதவி உயர்வு வாய்ப்புபெறும் நிலை உள்ளது.

அறிவியல் பாடங்களுக்கான பதவி உயர்வில் மட்டும் கிராஸ் மேஜர் முறை இல்லாதபோது மொழிப்பாடத்திலும், வணிகவியல், பொருளாதார பாடங் களில் மட்டும் இந்த முறையை அனு மதிப்பது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கழக மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.என்.ஜனார்த்தனன் கூறியதாவது:-

தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களில் தேவையான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கிடைக்காத காலத்தில் இதுபோன்ற பதவி உயர்வு உத்தரவு போடப்பட்டது. ஆனால், தற்போது இந்த பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மிக அதிகமாக உள்ளனர்.

அப்படியிருக்கும்போது இன்னும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பது முரண்பாடாக இருக் கிறது. இளங்கலை வேறு பாடத் தையும் முதுகலை வேறு பாடத்தையும் படித்த ஆசிரியர்களைக் காட்டிலும் இரண்டு படிப்பிலும் ஒரே பாடத்தை படித்துள்ள ஆசிரியர்களுக்கு பாட அறிவு ஆழமாக இருக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக