வியாழன், 27 பிப்ரவரி, 2014

விரிவான செய்தி :தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு 2 நாள் சம்பளம், நிறுத்தம் செய்யப்படுவதுடன், துறை ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.

மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை, தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மத்திய அரசுக்கு இணையான ஊதியம், ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கடந்த இரு நாட்களாக ஈடுபட்டனர்.

கடந்த 25ம் தேதி பள்ளிக்கு வருகை புரிந்தும், பாடம் நடத்தாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2ம் கட்டமாக நேற்று தற்செயல் விடுப்பு பெற்று, பள்ளிக்கு வருவதை தவிர்த்தனர். போராட்டத்தின் போது மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, மாவட்ட வாரியாக, தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப, தொடக்க கல்வி இயக்குனர் நேற்று, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிட்டுள்ளார்.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது, அரசு பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒழுங்கீன நடவடிக்கை விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நேற்று தற்செயல் விடுப்பு பெற்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளின் மூலம், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை அடங்கிய பட்டியல், சென்னைக்கு நேற்று காலை 11:00 மணிக்கு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் 2 நாள் சம்பளம், நிறுத்தம் செய்யப்படுவதுடன், துறை ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது. இதுதொடர்பாக இயக்குனரக வட்டாரம் மேலும் கூறியதாவது: ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும், "டெபுடேஷன்" முறையில், கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, மாணவர் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டம் நடத்திய 2 நாளுக்கும், சம்பளம், நிறுத்தம் செய்யப்படும். மேலும் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.

சங்கத்தின் பொதுச்செயலர், ரங்கராஜன் கூறுகையில், "55 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றனர். சங்கத்தின் செயற்குழுவை கூட்டி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுப்போம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக