வியாழன், 19 ஜூன், 2014

ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க கல்வித் துறை பரிசீலனை

தமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
மாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 16 முதல் துவங்கியுள்ளது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26ல் நடக்கிறது.
இதில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் குறைந்ததால், தற்போதுள்ள மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆக கணக்கிட்டு, 'பணிநிரவல்' அடிப்படையில் அவர்களை பணியிட மாறுதல் செய்ய கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பணி மாறுதல் செய்யப்பட்டால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா என்ற தகவலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, 'சர்பிளஸ்' ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இப்புதிய பணியிடங்களை, ஆங்கில வழி வகுப்புகளுக்கு பாடவாரியாக ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை ஜூன் 26 ல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் நடக்கும் பணிநிரவல் 'கவுன்சிலிங்' முன் ஒதுக்கீடு செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்பிளஸ்' பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கையுடன், கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய பரிசீலனை நடக்கிறது. மாவட்டம் தோறும் ஒதுக்கப்பட்ட புதிய பணியிடங்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 26 சர்பிளஸ் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை சேர்ந்து, கூடுதலாக 220 புதிய பணியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக