புதன், 18 ஜூன், 2014

மறதி ஏன் ஏற்படுகிறது?

திரும்பத்திரும்ப எண்ணிப்பார்க்காத எதுவும் மறந்துபோகும். அண்மையில் ஏற்படும் பதிவுகள் முன்பே ஏற்பட்டிருந்த பதிவுகளை பாதிக்கலாம். இதையே நாம் மறதி என்கிறோம். நினைவில் வைக்க வேண்டும் என்ற முயற்சியின்மை, உடல்சோர்வு, நோய், பயம், வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத அதிர்ச்சி, விபத்து ஆகிய காரணங்களாலும் மறதி ஏற்படலாம். பொதுவாக உடல் உள்ளம் ஆகிய இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ பாதிக்கப்படும்போது நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது.

திரும்பத்திரும்ப துடைத்து வைக்காவிடில் மோட்டார் சைக்கிள் அல்லது மிதிவண்டி துருபிடித்துப் போகிறது. அப்படித்தான் திரும்பத்திரும்ப துலக்கி வைக்காவிடில் நினைவும் மறந்துபோகும். அடிக்கடி நினைவில் கொண்டுவருகிற எதுவும் மறப்பதில்லை. "அ, ஆ, இ, ஈ" என்றோ படித்தது. "ஒன்றும் ஒன்றும் இரண்டு" என்னும் வாய்ப்பாடு என்றும் மறப்பதில்லை. காரணம் நாம் அடிக்கடி அதை நினைவில் கொண்டுவந்து பயன்படுத்துகிறோம்.

நினைவு என்பது மனத்தில் நிலைத்த பதிவு என்றால் மறதி என்பது அந்தப்பதிவு அடியோடு மறைந்து விடுவதாகாது. ஒன்றைத் தற்காலமாக நினைவில் கொள்ள முடியாத நிலையே ஆகும். கற்றறிந்த அனைத்தும் பதிவுகளாக உள்ளன. திடீர் அதிர்ச்சியில், விபத்தில், நோயில் நினைவுகளை முற்றிலும் மறந்துபோன ஒருவர் உரிய சிகிச்சையினாலோ மீண்டும் ஏற்படும் அதிர்ச்சிகளாலோ மறந்துபோனதை திரும்பவும் பெறுவதைக் காண்கிறோம்.

நன்கு படித்துவிட்டு தேர்வெழுதப் போனவர் தேர்வு நடைபெறும் அறைக்குள் சென்றதும் வியர்த்து நடுங்கி பயத்தின் காரணமாக படித்ததையெல்லாம் மறந்துவிட்டு நன்கு தேர்வு எழுதாமல் வெளியே வந்து நண்பர்களிடம் இப்போது எல்லாம் நினைவுக்கு வருகிறதே என்று சொல்வதையும் காண்கிறோம்.

எனவே படித்த, அறிந்த எதுவும் மறந்து போவது என்றால் முற்றிலும் அழிந்து போவதில்லை. ஒருமுறை நினைவில் பதிந்துவிட்டால் அதன் வடுக்கள் எப்போதும் இருக்கும். ஒரு கண்ணாடிக் கோப்பையில் உள்ள தண்ணீரில் சாக்கட்டியைத் தூள் செய்துபோட்டால் சிறிது நேரத்தில் அது தண்ணீரில் கரைந்துவிடும். பிறகு சாக்குத்தூள் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனாலும் அதன் தாக்கத்தை தண்ணீரில் காணலாம். அதன் துகள்கள் கோப்பையின் அடியில் படிந்திருக்கும். அதேபோல் நினைவுகளும் மனத்தின் ஆழத்தில் இருக்கும். முயற்சியும், பயிற்சியும் இருந்தால் அறிந்த எதையும் மீண்டும் நினைவில் கொண்டுவரலாம்.

நினைவாற்றலை அதிகரிக்கும் வழிகள்

வயதாக வயதாக நினைவாற்றல் குறையுமா? வயதாகிவிட்டது எல்லாம் மறந்துவிட்டது என்பதைக் காணலாம். ஆனால் தமது தள்ளாத முதுமையிலும் தொண்ணூற்று ஐந்து வயதிலும் மிகத் தெளிவான சிந்தனையும், நினைவாற்றலும் உடையவராக இருந்துள்ளனர் என்பது நாடறிந்த உண்மை.

ஒரு கட்டுரையை மனப்பாடம் செய்யும் ஒரே வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஐந்து முறை படித்தவுடனே நினைவில் பதிய வைத்துக் கொண்டார்கள் என்று சொல்லிவிட இயலாது சிலர் இரண்டு மூன்று முறையில்கூட அதை மனப்பாடம் செய்துவிடக்கூடும். சிலருக்குப் பத்துமுறை படித்தும் மனத்தில் பதியாமல் போகலாம்.

இதேபோல் சிலருக்கு அறிவியல் பாடம் எளிதில் நினைவில் நிற்கும். சிலருக்கு வரலாற்றுப் பாடமும், வேறு சிலருக்கு இலக்கியப் பாடங்களும் எளிதில் நினைவில் நிற்கும். பாடத்திற்குப்பாடம் நினைவாற்றல் மாறும் என்பதல்ல. மேற்கண்டவற்றுக்கெல்லாம் காரணம் படிப்பவரின் ஆர்வத்துடன் கூடிய கவனம், நோக்கம், விருப்பம், தன்னம்பிக்கையோடு கூடிய முயற்சி மற்றும் பயிற்சியும் ஆகும்.

கவனம்

ஒருவரின் நினைவாற்றல் அவரின் கவனத்தைப் பொருத்து அமைகிறது. நீங்கள் கவனத்தில் கொள்ளாத எதையும் நினைவில் வைக்கமுடியாது. மனம் கவனிக்கவில்லை (Absent Minded) என்றால் உங்கள் கண்களால் பார்த்தாலும் நினைவில் பதியாது. இடியிடித்தாலும் காதில் கேட்காது. 'என்ன என்னை நடுத்தெருவில் பார்த்தும் பார்க்காதது போல போய்விட்டீர்களே என்பதையும் மற்றவர் அதை மறுத்து இல்லையே உங்களைப் பார்க்கவே இல்லையே என்பதையும் பலநேரங்களில் கண்டிருப்பீர்கள். இதற்கெல்லாம் காரணம் கண் பார்த்திருக்கும் ஆனால் கவனம் வேறு எங்கோ இருந்திருக்கும். அதனால் பார்த்தது நினைவில் பதிவதில்லை.

நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள விரும்பாத எதையும் நினைவில் நிறுத்துவது கடினம். ஆர்வத்துடன் கூடிய கவனம் நினைவை அதிகரிக்க மிகமிக அவசியம். கவனத்தை படிப்பில் செலுத்த வேண்டுமானால் மனம் சமநிலையில் இருக்க வேண்டும். மனம் சமநிலையில் இருக்கும்போது எதைச் செய்தாலும் சரியாகச் செய்ய முடியும். எதைப்படித்தாலும் மிகுதியாக கிரகித்துக் கொள்ள முடியும். வானொலிக்கு இருப்பதுபோல மனத்திற்கும் அலைவரிசை உண்டு. இதை EEG மூலம் அளந்தறிந்துள்ளார்கள்.

மனஅலைகளின் எண்ணிக்கை 7 – 14 வரை இருந்தால் அது ஆல்பா நிலை என்று பெயர். இந்த அலைவரிசையில் மனம் சமநிலையில் இருக்கும். மனஅலைகள் 14க்கு மேல் போகுமானால் பீட்டா நிலை என்பர். இந்நிலையில் மனம் அமைதியற்று அலைபாய்ந்து கொண்டிருக்கும் (உயர்ச்சி வயப்பட்ட நிலைகளான கோபம், தூக்கம், தாபம்). மனஅலைகள் 7க்கு கீழ் இருந்தால் காமா என்றும், 4க்கு கீழ் இருந்தால் டெல்டா என்றும் (நாம் உறங்கும்போது இருக்கும்நிலை) கூறுகின்றனர். எனவே மனம் சமநிலையில் (ஆல்பா) இருக்கும்போது படிப்பதுதான் நன்கு நினைவில் பதியும். ஆகவே படிக்கத் தொடங்கும் முன் மனத்தைச் சமநிலைக்கு கொண்டுவர வேண்டும்.

மனத்தைச் சமநிலைக்கு கொணவர்வது எப்படி?

மனத்தைச் சமநிலைக்குக் கொண்டுவர எளிதில் முடியுமா என்றால் முடியும். அதற்கு ஒரு எளிய பயிற்சி:

மனத்தை சமநிலைக்குக் கொண்டுவர எளிதில் முடியுமா என்றால் முடியும். அதற்கு ஒரு எளிய பயிற்சி:

1. முதலில் வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். தலையிலோ அல்லது நாற்காலியிலோ எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து கொள்ளலாம்.
2. பிறகு மெல்ல கண்களை மூடிக்கொள்ளுங்கள். அவசரப்படாமல் மிகவும் இயல்பாக செய்யுங்கள்.
3. இப்போது காற்றை மூக்கின் வழியாக மெல்ல உட்சுவாசித்து பிறகு வாய்வழியாக வெளிவிடுங்கள். இப்படி நான்கைந்து முறை செய்யுங்கள். அப்படி காற்றை வெளிவிடும்போது "அமைதி, அமைதி, அமைதி" என்றோ அல்லது "Relax, Relax, Relax" என்றோ உள்ளத்துக்குள்ளேயே உச்சரியுங்கள்.
4. தற்போது உங்கள் காதுகளை நன்கு தீட்டிக்கொண்டு வீட்டிற்கு வெளியிலிருந்து வரும் ஓசையை கவனியுங்கள் (வாகனங்கள் உண்டாக்கும் ஒலி, மோட்டார் உண்டாக்கும் ஒலி போன்று ஆனால் வீட்டில் அம்மா சமையலறையில் உருட்டுகின்றபோன்ற ஒலிகளில் கவனம் செலுத்தக்கூடாது). ஆனால் காற்றாடி (Fan) ஓடும் சத்தம் போன்றவற்றைக் கேட்கலாம்.
5. அடுத்து உங்கள் சுவாசத்தை கவனியுங்கள். காற்று உட்சென்று வெளியேறும் ஒலியைக் கவனியுங்கள்.
6. இப்போது உங்கள் மனத்தில் எழும் எண்ணங்களைக் கவனியுங்கள். வருகிற எண்ணங்களை கட்டுப்படுத்த நினைக்காதீர்கள் (இதனால் விளையும் பயன்களை அடுத்துவரும் கட்டுரைகளில் விரிவாகப் பார்ப்போம்). உங்கள் அடிமனதில் அழுந்திக்கிடந்த தீண எண்ணங்களும், நிறைவேறாத ஆசைகளும், தோல்வி எண்ணங்களும் இன்னும் பலவும் பறந்து பறந்து வருவதைக் கவனிக்கலாம். ஓரிரு நிமிடம் எண்ணக்குதிரைகளை ஓடவிடுங்கள்.
7. மீணடும் சுவாசத்தை கவனியுங்கள். அடுத்து புற ஓசைகளை கவனியுங்கள். பிறகு மெல்ல இமைகளைத் திறந்து பாருங்கள்.

இந்தப் பயிற்சிக்கு 5 நிமிடம் போதுமானது. தினமும் தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்யுங்கள். யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியை செய்யலாம். எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் முக்கியப் பயிற்சியாகும். அயர்வு மேலாண்மையில் (Stress Management) இது ஒரு முக்கியப் பயிற்சியாகும். ஒவ்வொரு நாளும் பெரும்பாலும் எல்லோரும் பல்வேறு மனஅழுத்தங்களுக்கு (Tension) ஆளாகிறோம். அவற்றிலிருந்து விடுபட மிகச்சிறந்த மருந்தாக இந்தப் பயிற்சி உங்களுக்குப் பயன்படும்

எப்போதும் மனம் சமநிலையில் இருந்தால் படிப்பது நினைவில் பதிவது மட்டுமல்ல பல்வேறு நோய்களிலிருந்தும், தினம் தினம் நமது அகவாழ்வில் புறவாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் நிகழாமலும் தவிர்க்கலாம். மனத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள பல்வேறு பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றை எழுதினால் புரிந்து கொண்டு செய்வது கடினம். முறையாக செய்யவில்லை என்றால் பயன் இருக்காது. எனவே அவற்றை அறிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் நேரில் தொடர்பு கொள்ளுங்கள்.

குறிப்பாக, மாணவர்கள் கவனத்தை ஒழுங்குபடுத்த மேலும் ஓர் எளிய வழி இருக்கிறது. உட்கார்ந்து ஏதேனும் பாடத்தை சிறிதுநேரம் எழுதத் தொடங்குங்கள். அலைபாயும் மனம் உடனே உங்கள் கட்டுப்பாட்டில் வரும். பிறகு படிக்கத் தொடங்கலாம்.

நோக்கம்

பாடத்தைப் படித்தால் விரைவில் மனப்பாடம் செய்ய முடியாத அதே மாணவன், பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு உரை முழுவதையும் இரண்டொரு முறை படித்து மனப்பாடம் செய்துவிடுகிறான். அதேபோல மனப்பாட செய்யுளை நினைவில் நிறுத்துவதற்கும் மற்ற பாடல்களை நினைவில் நிறுத்துவதற்கும் வேறுபாடு உண்டு. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஒரு நோக்கத்தோடு ஆழ்ந்து கற்கிறபோது விரைவில் நினைவில் பதிந்துவிடுவதைக் காண்கிறோம். நுனிப்புல் மேய்கிறவர்கள் திரும்பத்திரும்பப் படித்தாலும் மனத்தில் பதிவதில்லை. மிகுந்த மதிப்பெண்கள் பெற்று தொழிற்கல்வியில் இடம்பெற வேண்டும் என்று ஒரு பள்ளி மாணவனும் எப்படியும் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று ஒரு கல்லூரி மாணவனும் எண்ணி உயர்ந்த நோக்கத்தோடு படிக்கிறபோது படிப்பவை பசுமரத்தாணிபோலப் பதியும்.

விருப்பம்

எதையும் விருப்பத்தோடு செய்கிறபோது விரைவில் செய்து முடிக்க முடியும். அதேபோலத்தான் உள்ளார்ந்த விருப்பத்தோடு படிக்கிறபோது விரைவில் நினைவில் பதியும். விரும்பிச் செய்யும் செயல்களில் முழு மனமும் ஈடுபடுகிறது. என்னுடைய மாணவரில் ஒருவர் பல பாடங்களில் தேர்ச்சி தவறி எப்போதோ பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டியவர் முடிக்காமல் அவருக்குப் பின்பு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களோடு சேர்ந்து இப்போது பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மக்கு, முட்டாள், மூளையில்லாதவன் என்றெல்லாம் அவரைச் சொல்லாமல் ஒவ்வொரு முறையும் வீட்டுப்பாடங்களை அவர் முடித்து வந்து காட்டுகிறபோது, அவரைப் பாராட்டி ஊக்கப்படுத்தினேன். அவரிடம் இருந்த குறைபாடுகளைப் பெரிதுபடுத்தாமல், வகுப்பில் மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவர் சிறப்புகளை குறிப்பிட்டுப் பாராட்டினேன். அந்த மாணவர் கடந்த இறுதித் தேர்வில் நூற்றுக்குத் தொண்ணூறு மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

அண்மையில் ஒருநாள் அந்த மாணவர் வந்து என்னைச் சந்தித்தார். "மற்றவர்கள் முன் என்னை நீங்கள் பாராட்டியதால் என் தாழ்வு மனப்பான்மை நீங்கியது. படிப்பதில் ஆர்வமும், விருப்பமும் பிறந்தது. முன்பும் படித்தேன். ஆனால், அப்போது நிற்காதது இப்போது எளிதில் நினைவில் நிற்கிறது" என்றார். எனவே விருப்பத்தோடு படிக்கிறபோது எளிதில் நினைவில் நின்று விடுகிறது என்பதையே இந்த நிகழ்ச்சி நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

"பாராட்டும் ஒரு வகையில் மனிதனைச் சிறந்த மனிதாக்குகிறது" என்றார் ஓர் அறிஞர். இங்கே பாராட்டு ஒரு மாணவனின் தாழ்வு மனப்பான்மையை அகற்றி அவரின் திறனை வெளிக்கொணரச் செய்தது.

சிந்தனையாளர் எமர்சன் ஒருமுறை சொன்னார், "எப்போதாவது உங்கள் மகனுக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பினால் அவனுக்கு உற்சாகத்தைப் பரிசாகக் கொடுங்கள்" என்றார்.

எல்லா மூளைக்கும் அபாரமான நினைவாற்றல் சக்தி இருக்கிறது; ஆனால் ஈடுபாட்டுடன் படிக்கும் தன்மைக்கு ஏற்பவே நினைவுச் சக்தியின் நிலைப்புத் தன்மை அமைகிறது. நமக்குப் பிடித்த மாணவர்கள் எப்போதும் நம் நினைவில் இருப்பார்கள். நமக்கு விருப்பமான திரைப்படப் பாடல் ஓரிருமுறை கேட்டாலே போதும் நினைவில் நின்று விடுகிறது. திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வருகிற பலர் முதலிலிருந்து முடிவு வரை ஒரு சில காட்சி கூட மறக்காமல் அப்படியே சொல்லி முடிப்பார்கள். இதற்குக் காரணம் விருப்பத்தோடும் ஈடுபாட்டோடும் பார்ப்பது தான்.

நம் உள்ளத்துக்கு உவப்பை அளிக்கும் எந்தச் செயலையும் நாம் மறப்பதில்லை. மகிழ்ச்சியை அளிக்கத்தக்க நிகழ்ச்சிகள் எப்போதும் மனத்தில் இருக்கும்.

பிறருடைய கட்டாயத்தால் வற்புறுத்தலால் செய்யப்படும் எந்தச் செயலும் முழு வெற்றி அடையாது. எனவே சுய விருப்பம் (Self Interest) தேவை.

தன்னம்பிக்கை

அய்யோÐ இவ்வளவு பெரிய செய்யுளா? என்னால் மனப்பாடம் செய்ய முடியாது என்று நினைத்தால் முடிôயதுதான். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் எதையும் உங்கள நினைவில் வைக்கலாம்.

பயிற்சி

ஆளுக்கு ஆள் மாறுபடும் இந்த நினைவாற்றலைப் பயிற்சிகள் மூலம் அதிகரிக்கலாம். 'சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்' என்பார்கள். திரும்பத்திரும்ப ஒரு செயலைச் செய்யும் போது அது வலிவான பதிவுகளை மனத்துள் உருவாக்கி விடுகிறது.

கூட்டங்களில் சொற்பொழிவாற்றி விட்டு வரும்போது சிலர் கேட்பதுண்டு, 'எப்படி இவ்வளவு செய்திகளை ஏராளமான கவிதைகளை சிறு குறிப்புகூட இல்லாமல் தங்கு தடையின்றி உங்களால் பேச முடிகிறது?' என்று.

மிக நெடிய பல கவிதைகளைக்கூட நினைவில் வைத்துக்கொண்டு, வேண்டிய போது சொற்பொழிவுகளில் எடுத்தாள முடிவதற்கு காரணம் ஓய்வு கிடைக்கும்போதும், பேருந்து தொடர்வண்டி போன்றவற்றில் பயணம் செய்கையிலும், நெடுந்தொலைவு நடந்து செல்ல நேரும் போதும் முன்பு படித்த பாடல்களை சொல்லிப் பார்ப்பது வழக்கம். இதனால் பயணமும் சுகமாகும்; எவ்வளவு தூரம் நடந்தாலும் களைப்பே தெரியவாது. நினைவிலும் நிலைத்து நிற்கும். கற்றதை அடிக்கடி நினைத்துப் பார்ப்பது, பலமுறை எழுதிப் பார்ப்பது மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்கும்.

நினைவாற்றல் வளர்ச்சிக்க மூளை நல்ல செயல்பாட்டுடன் திகழ்தல் வேண்டும். இதற்கு மூளைக்கு இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க இருக்கைப் பயிற்சிகள் (யோகாசனப் பயிற்சிகள்) செய்யலாம். குறிப்பாக, தலையாலிருக்கை (சிரசாசனம்) அனைத்துறுபமிருக்கை (சர்வாங்காசனம்) மற்றும் உழவிருக்கை (ஹாலாசனம்) போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். அல்லது சர்வாங்கசனம் மட்டும் செய்தால் கூட போதும். தலையாலிருக்கை போன்றவற்றைச் செய்வது சிரமம்.

சர்வாங்காசனத்தையும் சிரமமின்றி மிக எளிதாக செய்ய முதலில் தலையில் போர்வையை இரண்டாக அல்லது மூன்றாக மடித்து மெத்தென போட்டுக் கொள்ளுங்கள். போர்வை மத்தியில் மூன்று தலையணைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து அதன்மீது அமருங்கள். பிறகு மெல்ல மல்லாந்து உடலை சாய்த்து தோள்பட்டைகளும் தலையும் போர்வைமீது படும்படியாக இருக்கச் செய்யுங்கள். இப்போது உங்கள் பாதங்கள் தலையணைக்கு அப்புறம் போர்வைமீது படிந்திருக்கும். கைகளை தலையணையின் இருபக்கங்களிலும் நீட்டிக் கொள்ளுங்கள். இப்போது கால்களைச் செங்குத்தாக மேலே உயர்த்தி 1 முதல் 100 வரை மனதுக்குள் எண்ணுங்கள். பிறகு கால்களை மடக்கி பாதங்களை போர்வை மீது பதித்து சில வினாடிகள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் கால்களை செங்குத்தாக உயர்த்துங்கள். இதுபோல பயிற்சிதாங்கும் சில நாட்களுக்கு 500 எண்ணும் வரை செய்து பிறகு 1500 எண்ணிக்கை வரை நீட்டிக்கலாம். பயிற்சியை முடிக்கும்போது பாதத்தைத் தரையில் ஊன்றி இடுப்பை மேலே உயர்த்தி அடியில் உள்ள தலையணைகளை வெளியே இழுத்து விட்டு அப்படியே மல்லாந்து படுத்து கால்களை நன்கு அகற்றி வைத்துக்கொண்டு கண்களை மூடிக சிறிதுநேரம் ஓய்வு எடுக்க வேண்டும். இந்த பயிற்சியை செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து குளித்தபின், இந்தப் பயிற்சியை செய்யலாம் அல்லது மாலையில் செய்யலாம்.

வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு, கீரை வகைகள் (குறிப்பாக, வல்லாரைக் கீரை), பிரண்டைத் தண்டு துவையல், தூதுவளை போன்றவை மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவு வகைகள் என வள்ளலார் கூறியுள்ளார்.

மூளைக்கு பிராணவாயுவை (ஆக்சிஜன்) அதிகம் செலுத்துவதன் மூலம் மூளைச் செல்கள் சுறுசுறுப்புடன் இருக்கச் செய்யலாம். இதற்கு 'கபாலபாத்தி' என்னும் மூச்சுப்பயிற்சியை செய்யவேண்டும். இந்தக் கலையைப் பயின்றவர்களிடம் கேட்டு எப்படி செய்வதென தெரிந்து கொள்ளுங்கள். வாய்ப்பும் விருப்பமும் இருப்பவர்கள் எம்முடன் நேரில் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களால் முடியும்

படிப்பதை கவனத்தோடும், உரிய நோக்கத்தோடும் படித்து, படித்ததை மீட்டறிந்து நினைவில் நிறுத்தி, மீட்டழைத்து, இந்தப் பயிற்சியை திரும்பத்திரும்ப இடைவெளிவிட்டு செய்வதோடு, தக்க உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் செய்துவந்தால் உங்களாலும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்.







Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக