தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சரியாக பிற்பகல் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

ஆளுநர் மாளிகையில், எளிமையான முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்துடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ, முக்கியப் பிரமுகர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை.

அமைச்சரவை இலாகாக்களில் மாற்றம் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். | படம்: பி.அரவிந்த் குமார்

கண்ணீர் மல்க பதவியேற்பு

ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், பதவியேற்பு நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். தொடர்ந்து அவர் அழுத வண்ணமே இருக்கையில் அமர்ந்திருந்தார்.

பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படடு உறுதிமொழியை ஏற்ற பின்னர் பதவியேற்புப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது பன்னீர்செல்வம் கண்ணீர் சிந்தினார். மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் பலரும் கண்ணீர் சிந்தினர்.

பதவியேற்பின்போது கண்ணீர்விட்ட அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்

சமூக நலத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டிருந்தபோதே தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவராகத் தேம்பித் தேம்பி அழுதபடி இருந்தார் பா.வளர்மதி.

அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் பதவியேற்றபோது அழுதுகொண்டே உறுதிமொழியை ஏற்றனர். பா.வளர்மதி அமைச்சராக பதவியேற்றபோது தேம்பித் தேம்பி அழுதார்.

பதவியேற்பு விழாவில் கண்ணீர் மல்கிய அமைச்சர்கள். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்

2-வது முறையாக முதல்வரானார்:

டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வராக பதவியேற்றது செல்லாது என கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஜெயலலிதா பதவி இழந்தார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம்தான் புதிய முதல்வராக பதவியேற்றார்.

அதேபோல, இப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவியிழந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

முதல்வர் பொறுப்பேற்றார்:

தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச்செயலகத்தில் முறையாக முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மரியாதை நிமித்தமாக தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் சந்தித்தார்.

பெங்களூர் விரைகிறார்:

தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் சென்று முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அங்கு கையெழுத்திட்ட பின்னர் இன்று மாலை 4.45 மணி விமானத்தில் பெங்களூர் செல்கிறார். அவருடன் அமைச்சர்களும் பெங்களூர் செல்கின்றனர். முதல்வராக பதவியேற்ற பின்னர் அவரது முதல் பயணம் பெங்களூர் நோக்கி உள்ளது. தீர்ப்புக்குப் பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலைதான் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.

ஒருமனதாக தேர்வு:

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப் பேரவை கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க வருமாறு பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, ஜெயலலிதாவின் முதல்வர் பதவியும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் தானாகவே பறி போனது. முதல்வர் பதவி காலியானதால், அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி இழந்தது.

இதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 3.20 மணிக்கு தொடங்கியது. இதில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மட்டு மின்றி, வழக்கத்துக்கு மாறாக நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சியின் மூத்த தலைவர்கள், தேமுதிக அதிருப்தி உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் டிஜிபி நடராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பெங்களூரில் இருந்து ஜெயலலிதா கொடுத்தனுப்பிய ஒரு கடிதத்தை கூட்டத்தில் படித்துக் காட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல் வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். மாலை 4.30 மணி அளவில் கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச் சாமி உள்ளிட்டோர் போயஸ் கார்டனுக்கு சென்றனர். 6 மணி வரை அங்கு ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் ராஜ்பவனுக்கு புறப்பட்டனர்.

ராஜ்பவனில் ஆளுநர் கே.ரோசய்யாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவையும் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் அளித்தார். சுமார் 10 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.

இதையடுத்து, ஆட்சி அமைக்க வருமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார். புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வம் தமிழகத்தின் 28-வது முதல்வரானார்.