வெள்ளி, 31 அக்டோபர், 2014

பள்ளிகள் மொழிப்பாடங்களுக்கு அதிக அக்கறை காட்டுவதில்லை :மாணவர்கள், மொழித்திறன் குறைகிறது

ஐஐடி முதலாமாண்டு மாணவர்கள் எழுதிய ஆங்கில தேர்வில் 239 பேர் தோல்வியடைந்துள்ளனர். மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை ஐஐடியில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவமாணவிகள் படித்து வருகின்றனர். பொதுவாக ஐஐடிக்களில் ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படுவதால், அங்கு படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.எனினும், அனைத்து ஐஐடிக்களும் மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் தேர்வுகளை நடத்தி மாணவர்களின் ஆங்கில
திறனை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஆங்கில பயிற்சி மற்றும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில்,ஒருவார்த்தை கேள்விகள், கட்டுரைகள், ஆங்கில இலக்கண திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆங்கில தேர்வு நடைபெற்றது. இதில் 1,310 மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால், 1,071 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று, 239 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:பொதுவாக பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மொழிப்பாடங்களை விட மாற்றப்பாடங்களுக்கு தான் அதிக அக்கறை எடுத்து படிக்கின்றனர். 12ம் வகுப்பு முடித்த பிறகு ஐஐடியில் சேரவிரும்பும் மாணவர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்கின்றனர். அங்கேயும், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகிறது. மொழிப்பாடங்களுக்கு பயிற்சி இல்லை.இதுவே, மாணவர்களின் மொழித்திறன் குறைவதற்கு காரணமாக அமைகிறது. இதை கருத்தில் கொண்டே ஐஐடி சார்பில் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஐஐடி மாணவர் ஒருவர் கூறுகையில், 'பள்ளிகளில் பொதுவாக மொழிப்பாடங்களுக்கு அதிக அக்கறை காட்டுவதில்லை. நான் பள்ளியில் படிக்கும் போது, எனது பெரும்பாலான மொழிப்பாட வகுப்புகளின் போது அறிவியல் ஆசிரியரோ அல்லது கணித ஆசிரியரோ வந்து அவரது பாடத்தை எடுப்பார். மொழிப்பாடங்களை மனப்பாடம் செய்ய சொல்லுவார்கள் அவ்வளவுதான். மேலும், ஐஐடி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு மொழிப்பாட மதிப்பெண்களை கேட்பதில்லை. மாறாக கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே மதிப்பீடு செய்கின்றனர். இதனால், மொழித்திறன் குறைகிறது,' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக