ஞாயிறு, 25 ஜனவரி, 2015

TRB PG ANSWER KEY:தொல்காப்பியரின் செவ்வியல் அணுகுமுறை :கதைமாந்தர் கூற்றில் உவமை வரும்போது அக்கதை மாந்தர் அறிந்த பொருள்களைக் கொண்டே உவமை கூற வேண்டும்!


1.2.4 தொல்காப்பியரின் செவ்வியல் அணுகுமுறை
 

செவ்வியல் நெறிமரபில் சமூகத்தின் படிவரிசையில் மேல்மட்டத்தில் இருக்கின்ற உயர்குடி மக்களையே கதைமாந்தர்களாகப் படைப்பர்.  தொல்காப்பியரும் தலைவன்,  தலைவி ஆகிய இருவரும் சமூகத்தின் உயர்தளத்தில் விளங்குபவர்களாக இருக்க வேண்டும் என விதிக்கிறார்.  பிறப்பு,  குடிமை, நிறை, அருள் போன்ற அனைத்திலும் உயர்ந்தோராக, தம்முள் ஒத்தோராக அவர்கள் விளங்கவேண்டும் என்கிறார்.
 

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.
      (மெய்ப்பாட்டியல், 25)
 

சமூகத்தில் அடிமைகளாகவும் ஏவல் செய்வோராகவும் விளங்குகின்ற மனிதர்களைக் கதை மாந்தர்களாக அன்பின் ஐந்திணை எனும் அகப்பாடல்களில் பாடக்கூடாது என்றும் வலியுறுத்துகிறார். ஐந்திணைக்குப் புறம்பான கைக்கிளையிலும் பெருந்திணையிலும்தான் அவர்களது காதல் வாழ்வைச் சொல்லலாம் என்கிறார். 
 

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இல புறத்து என்மனார் புலவர்.         
(அகத்திணையியல், 25)
 

இவ்வாறு கதை மாந்தர்களை வடிவமைப்பது குறித்துத் தொல்காப்பியர் பல்வேறு கருத்துகளை முன் வைக்கிறார்.
 

படைப்பாக்கத்தில் கதை மாந்தர்களை உருவாக்கிவிடுவதுதான் படைப்பின் வெற்றி என்ற உண்மையை அறிந்து,  ஆண் கதை மாந்தர்களையும் பெண் கதை மாந்தர்களையும் எவ்வெவ்வாறு படைத்துக் காட்ட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
 

பெருமையும் உரனும் ஆடூஉ மேன.      (களவியல், 7)
 

எனத் தலைவனுக்கும்,
 

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப.
          (களவியல், 8)
 

எனத் தலைவிக்கும் பண்புநலன்களை வகுத்தளிக்கிறார்.  மேலும் இக்கதைமாந்தர்கள் எந்தெந்தச் சூழ்நிலைகளில் யார் யாரிடம்,  எவ்வெவ்வாறு பேசிக்கொள்ள வேண்டும் என்பனவற்றையும் மிக நுட்பமாக வரையறுத்துக் கூறுகிறார்.  இக்கதை மாந்தர்கள் மெய்ப்பாடுகளை எந்தெந்த இடத்தில் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றையும் எடுத்துக்கூறுகிறார்.  மேலும் படைப்பாளி தனக்குத் தெரிந்த பொருட்களை எல்லாம் வைத்து உவமை கூறக்கூடாது.  கதைமாந்தர் கூற்றில் உவமை வரும்போது அக்கதை மாந்தர் அறிந்த பொருள்களைக் கொண்டே உவமை கூற வேண்டும் என்றும் சுட்டிச்செல்லுகிறார்.
 

'கிழவி சொல்லின் அவளறி கிளவி'.
'தோழிக்காயின் நிலம் பெயர்ந்து உரையாது'.
'கிழவோற் காயின் உரனொடு கிளக்கும்.'       
(உவமையியல், 25, 26, 27)
 

இவ்வாறு படைப்பாக்கத் தளத்தில் கதைமாந்தர்களை வடிவமைக்கும் முறை குறித்த தெளிவான இலக்கியக் கொள்கையை மேற்கொண்டவராகத் தொல்காப்பியர் விளங்குகிறார்.  இத்தகைய படைப்பு முறை குறிக்கோளியம் சார்ந்த உயர் நெறி வாழ்வைத் முதன்மைப்படுத்துவது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளமுடியும்.  இவ்வாறு சமூக மேல்மட்ட மாந்தரைப் படைத்தல்,  படைக்கும் முறையில் சிறந்த வழிமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றால் தொல்காப்பியரது செவ்வியல் அணுகுமுறையைப் புரிந்து கொள்ளலாம்.

http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/IV_Year/matt18/html/mat18001tp2c.htm

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக