வியாழன், 5 பிப்ரவரி, 2015

ஆசிரியர்கள் என்றால் அடிமைகளா?

நகரின் மையத்தில் பிரமாண்டமாக எழுப்பப்பட்ட பெரிய தனியார் பள்ளியொன்றில்
பயிலும் உங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள்,
உங்களுக்கோ, உங்களது பிள்ளைகளுக்கோ அல்லது இந்த சமுதாயத்துக்கோ மட்டுமே
ஆசிரியர்களாக பார்க்கப்படுகிறார்கள். வெளியில் இருந்து பார்த்தால்
அப்படித்தான் தெரியும்..உண்மையில் அந்தப் பள்ளி நிறுவனருக்கோ அல்லது
அப்பள்ளியின் தாளாளருக்கோ அவர்கள் அடிமைகள் அல்லது, சொன்னதைச் சொல்லும்
கிளிப்பிள்ளைகள்.

ஒரு சராசரி தொழிலாளிக்கு, ஒரு முதலாளியிடம் கிடைக்கும் நியாயமான
மரியாதைகூட பெரும்பாலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை.
சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட பெரும்பாலான பள்ளிகள் இன்று பெரும் புகழோடும்,
வானுயர உயர்ந்து நிற்கும் கட்டடங்களோடும், எல்.கே.ஜி-க்கே என்ட்ரன்ஸ்
எக்ஸாம் வைத்து சேர்க்கை நடத்தும் அசுர வளர்ச்சிகளுக்கும் பின்னால்
இருப்பது மடிப்பு கலையாத முழுக்கை சட்டையும், சட்டைக்கு தோதான டையும்
அணிந்தபடி பாடம் நடத்தும் ஆசிரியர்களும், வேலைக்குச் சென்று குடும்பத்தை
கரை சேர்த்தாக வேண்டிய ஆசிரியைகளும்தான்.

'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்னும் சிறப்பு எப்போதோ காலாவதியாகத்
தொடங்கிவிட்டது. ஒரு தனியார் பள்ளி ஆசியரிடம் சென்று "உங்கள் சம்பளம்
எவ்வளவு?" என்று கேளுங்கள். அவர் நிச்சயம் கூச்சத்தில் நெளிவார். சொல்லத்
தயங்குவார். அதையும் மீறி சட்டென அவர் பதில் சொல்கிறார் எனில் அவர்
சொல்வது பொய்யாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். காரணம் அவ்வளவு
அருமையான, சூப்பரான சம்பளத்தை அந்தப் பள்ளி தரும் என்று நினைத்து
விடாதீர்கள். தினக்கூலி செய்யும் ஒரு நபரின் மாத வருமானத்தைவிட தனியார்
பள்ளியின் ஆசிரியருக்கு சம்பளம் குறைவுதான். ஆச்சர்யமாக இருக்கிறதா?
அப்படிஎன்றால் இதையும் படியுங்கள்...

குறைந்த சம்பளத்தைக் கொடுத்து அவர்களிடம் வாங்கப்படும் வேலையானது,
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரனும் செய்யாத அளவுக்குக் கொடுமையானது. காலை
முதல் மாலை வரை தொடர்ச்சியான பாடவேளைகள், உட்காருவதற்கு நாற்காலிகளும்
இருக்காது, தொண்டை தண்ணி வற்ற கத்த வேண்டிய சூழல், ஓய்வறைகள்
இருக்கும்..ஆனால், ஒய்வு இருக்காது. வீடு திரும்ப போதிய பேருந்து
வசதிகளும் செய்துகொடுப்பதில்லை. சில பள்ளிகள், மாணவ மாணவியர்
பயன்படுத்தும் பேருந்தை குறைந்தபட்சம் பெண் ஆசிரியைகள்கூட பயன்படுத்த
அனுமதிப்பதில்லை. வகுப்பில் நின்றது போக பேருந்திலும் நின்றுகொண்டே
பயணித்து செல்லும் களைப்பு சொல்லி மாளாது.

இது தவிர விடுமுறைகள் என்பது அரிதிலும் அரிதானது. வெள்ளிக்கிழமையோ அல்லது
திங்கள்கிழமையோ விடுப்பு எடுத்தால், தொடர்ச்சியான மூன்று நாட்களுக்கான
சம்பளம் பிடிப்பு என்ற அற்பத்தனமான ஐடியாக்களைப் பின்பற்றும் பள்ளிகளும்
உண்டு. கோடை விடுமுறையிலும் இவர்களுக்கு 'ஆன் டியூட்டி தான். எப்படி
என்றால் ஏப்ரல், மே மாதங்களில் புதிய சேர்க்கையையும், பாடநூல்
விநியோகமும்,'கேன்வாஸ்' எனும் பெயரில் ஆள்பிடிப்பு வேலைகளையும் செய்ய
ஆட்கள் தேவை.

இப்படிப்பட்ட நெருடலான வேளையில், விரக்தியில், தவிர்க்க முடியாத
சூழ்நிலையில் வேலையை உதறிவிடலாம் என்று ஒரு ஆசிரியர் நினைத்தாலும் அது
முடியாது. ஏனென்றால், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களைப்
பணியிலமர்த்தும்போதே அவர்களின் அசல் சான்றிதழ்களை 'லாக்' செய்து
வைத்துவிடுவார்கள். தேள் கொட்டிய திருடனை போல மெல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல் இருப்போரின் பட்டியல் மிக நீண்டது.

இதுபோக பிள்ளைகளைக் கண்டித்தால் பள்ளிக்கே சென்று ஆசிரியரை எச்சரிக்கும்
பெற்றோர்களும், 'ஐ' பட விக்ரம் சொல்வதுபோல் 'அதுக்கும் மேல' சொல்ல
வேண்டுமானால் சமீபத்தில் சென்னையில் தன்னை கண்டித்த ஆசிரியரை ரவுடிகளை
அழைத்து சென்று அடித்து துவைக்கும் மாணவருமாக, பாதுகாப்பற்ற ஆசிரியர் பணி
சூழலும், என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா? என சொல்லத் தூண்டும்
ஆசிரியர்களின் டிராஜடி கதைகளும் நிறையவே உண்டு.

என்னதான் தீர்வு?

* சம்பளத்தை உயர்த்திக் கேட்டால் 'கூரை மேல சோறு போட்டா ஆயிரம் காக்கா'
எனும் சொலவடைக்குஏற்றார்போல் ஆசியர்களை நோக்கி நீ இல்லாவிட்டால்
இன்னொருவன் என்று பள்ளி நிர்வாகிகளால் ஏளனம் செய்யும் செய்யப்படும் நிலை
மாற்றப்பட வேண்டும்.

* அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இருப்பதுபோல தனியார் பள்ளிகளின்
ஆசிரியர்களுக்கும் தனியே ஒரு சங்கம் அமைக்கப்பட வேண்டும்.

* தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் செலுத்த வேண்டிய தொகையை அரசு
நிர்ணயம் செய்ததுபோல, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அவர்களின்
கல்வித்தகுதிக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்

* அரசே நேரடியாகத் தலையிட்டு உரிய சம்பளத்தை பெற்றுத்தர முன்வர வேண்டும்.

* விடுமுறைகளுக்கு சம்பளப் பிடித்தம் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்

* ஆசிரியைகளுக்கு பேறுகால விடுமுறைக்குப் பின் பணி உத்தரவாதம் தரப்பட வேண்டும்

* முறையான வைப்பு நிதித் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்

* காரணமின்றி ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்யக் கூடாது

* இன்க்ரீமென்ட் எனச் சொல்லப்படும் சம்பள உயர்வுகள் சரியான கால
இடைவெளியில் தரப்பட வேண்டும்

மேற்சொன்ன இவை அனைத்தையும் ஆசிரியர்களுக்கு செய்துகொடுப்பது மட்டுமே
கல்வி போதித்து, வருங்கால சாதனையாளர்களை உருவாக்கும் சிற்பிகளாகிய
ஆசியர்களுக்கு அரசாங்கம் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.

-மஹபூப்ஜான் ஹுசைன்
காரிமங்கலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக