செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

குழந்தைகளுக்கு அறநெறிக் கதைகள் தேவையில்லை!’ – ஆயிஷா நடராஜன்


தமிழில், சிறுவர் இலக்கியம் என்பதே மிகவும் குறுகி வருகிறது. இருப்பினும் சோர்ந்துவிடாமல் அத்துறையில் சிலர் தங்கள் பங்களிப்பைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். புகழ்பெற்ற 'ஆயிஷா' நாவலை எழுதிய நடராஜன் அவர்களுள்  ஒருவர். கல்வியாளரான இவருக்கு, இந்திய அரசின் மதிப்புமிகு பால சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. 

இரா. நடராஜன் (படம் உதவி: ப்ளிக்கர்)

நாம்: குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஏன் முக்கியமானது?
நடராஜன்: அதன்மூலம் அவர்கள் தம்முடைய கலாசார, பண்பாட்டு வேர்களை அறிந்து கொள்கிறார்கள். கதை என்பது வெறும் மனித, மிருகங்கள் உலா வருவது மட்டுமல்ல. குழந்தைகள் தங்களின் கல்வியைத் தொடங்குவது – தாத்தா பாட்டி, அம்மா அப்பா ஆகியோர் சொல்லும் கதைகளின் வாயிலாகவும்தான்.

நாம்: கதை கேட்கும் மனோபாவம் எந்த வயது வரை ஒரு மனிதனுக்கு இருக்கும்?
நடராஜன்: மனிதன், தன் கடைசி வாழ்நாள் வரையிலும் கதை கேட்கும் மனோபாவத்துடன்தான் இருக்கிறான். பிறர் வாய்மொழியாகச் சொல்லும் கதையைக் கேட்கும் வயதைத் தாண்டிவிட்டாலும், புத்தகங்களின் மூலம் எழுத்தாளர்களின் வாயிலாகவும், பத்திரிகைச் செய்தியின் மூலம் பத்திரிகையாளனிடமிருந்தும், திரைப்படங்களின் மூலம் இயக்குநரிடமிருந்தும் நீங்கள் கதைகளைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறீர்கள்.

நாம்: கூட்டுக் குடும்ப முறை சிதைந்துவரும் நிலையில், தாத்தா பாட்டியிடமிருந்து நமக்கு பழங்கதைகள் கிடைக்கும் வாய்ப்பு அருகிவிட்டது. அதை மீட்க நாம் என்ன செய்யவேண்டும்?
நடராஜன்: தாத்தா பாட்டிகளின் கதைகளை நாம் மீட்டெடுக்க வேண்டியது மிக முக்கியமான படிநிலை. ஏனெனில், மனிதர்களைக் கடத்திக்கொண்டு போய் முதியோர் இல்லங்களில் விடுவதை ஒரு கலாச்சாரமாக நம்மால் ஒப்புக்கொள்ள முடியாது. அவர்களின் கதைகளை மீட்டெடுக்க பலவித கலாச்சாரக் கூறுகளை ஆராய்ந்து வேலை பார்க்கவேண்டிய அவசியமிருக்கிறது. இதைச் செய்ய, நமது கல்விமுறைக்குள் புகுந்துகொண்டுதான் வேலை செய்யவேண்டும். குழந்தைகளைக் கதைசொல்லிகளாகவும் கதை கேட்பவர்களாகவும் மாற்றுவதே சிறந்த வழி!

நாம்: தாய்மொழியில் கதை சொல்வது அல்லது ஆங்கில சித்திரக்கதை இதழ்களை படிக்கச் செய்தல் /வாசித்துக் காட்டல் – இவற்றுள் எது சரி?

நடராஜன்: தாய்மொழி வழியே சொல்லிக் கொடுக்கப்படும் கதைகள்தான் குழந்தைகள் மனதில் நிலைத்து நிற்குமேயொழிய, பிறமொழிக் கதைகள்அல்ல. ஆங்கிலமொழி வழி அறியும் கதைகளில், ஆங்கிலப் படம் பார்ப்பது போல, அக்கதைகளின் உட்கூறுகளில் இயங்குகின்ற கதையின் அம்சங்களை மட்டும்தான் பார்க்கிறோமே தவிர, அதன் உள்ளே பொதிந்து இருக்கும் கலாச்சாரத்தை நம்மால் சரிவர உணர்ந்துகொள்ள முடிவதில்லை. அதுபோலத்தான் அந்தக் கதைகளும் வேலை செய்யும்.
நாம்: குழந்தைகளுக்குச் சொல்லப்படும் கதைகளின் அடிநாதமாக அறநெறிகள் இருக்கவேண்டும் என்பது கட்டாயமா?
நடராஜன்: யாருக்கு அறநெறி தேவை? பெரியவர்களுக்கா? குழந்தைகளுக்கா? பொய் சொல்லக் கூடாது என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், குழந்தைகளா பொய் சொல்கிறார்கள்? கொலை செய்யக் கூடாது என்கிறார்கள். குழந்தைகளா கொலை செய்கிறார்கள்? திருடக் கூடாது என்கிறீர்கள். குழந்தைகளா திருடுகிறார்கள்? நம்முடைய நாட்டில் குழந்தைகள் இலக்கியமென்றாலே புராண, இதிகாசங்கள்தாம் என்று முடிவு கட்டிவிட்டார்கள். இதனால்தான் குழந்தைகள் – புத்தகங்களை விட்டும், நீங்கள் சொல்லிக் கொடுக்கின்ற கதைகளை விட்டும் ஓடுகின்றார்கள். அறநெறிகளை முன்னிருத்தி, 'இப்படி நடந்துகொள்; அப்படி நடந்துகொள்!' என்று சொல்லப்படுகின்ற அறிவுரைகளை அவர்கள் வெறுக்கிறார்கள். ஒரு குழந்தையின் முன் அறநெறி அறிவுரைகளை சொல்லுவதைவிட, அதன்படி வாழ்வதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள், பின்பற்றுகிறார்கள். இந்த அடிப்படையில், குழந்தைகள் அறிவியல் கதைகளைப் படிக்க விரும்புகிறார்கள். புதிய புதிய வனராஜாக்கள் கதைகளை விரும்புகிறார்கள். இன்றைக்கு மலையாளத்திலும், கன்னடத்திலும், தமிழிலும் அதிகம் விற்பனையாகும் குழந்தைகள் நூல்கள் எவை என்று எடுத்துப் பாருங்கள். இவை அனைத்துமே அறநெறிக் கதைகள் இல்லை. இவற்றின் தேவை பெரியவர்களுக்குத்தானே ஒழிய, குழந்தைகளுக்குஅல்ல! குழந்தைகள் எப்போதும், கற்பனை உலகில் இருக்கவே விரும்புகிறார்கள். அழகான பட்டாம்பூச்சிகளின் உலகையும், அறிவாற்றல்மிக்க உலகையும் மற்றும் பஞ்சதந்திரக் கதைகள் மாதிரியான உலகையும்தான் அவர்கள் விரும்புகிறார்களே தவிர, அறநெறிக் கதைகளை இல்லை.
நாம்: குழந்தைகளின் கதைசொல்லும் திறன் வளரும்போது, அவர்களின் படைப்பாற்றல் வளர்கிறது என்று கொள்ளலாமா ? எதிர்காலத்தில் இது அவர்களுக்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கும்?

நடராஜன்: நம்முடைய கல்வி முறை, அறிவைக் குறிவைத்து இயங்குகின்ற கல்வி முறையாக இருக்கிறது. அந்த அறிவை மனப்பாடம் செய்து, விடைத்தாளில் கக்க வைக்கின்ற மோசமான கல்விமுறையாக இருக்கிறது. ஆசிரியர்களின் வேலையே, பாடப்புத்தகங்களில் அறிவு என்று சொல்லப்படுகின்றவற்றை, அப்படியே குழந்தைகளின் தலையைத் திறந்து வங்கிகளில் பணம் போடுவது போல 'பொத்து பொத்'தென்று போடுவதாக இருக்கிறது. குழந்தைகளைப் படைப்பாளி ஆக்குகின்ற படைப்பாக்க கல்வியை நோக்கி நாம் போகவேண்டும். ஒரு வகுப்பறையில் ஒரு நிலாவைப் பற்றி பாடம் நடத்துகிறோம் என்றால், அக்குழந்தை முதலில் நிலாவைப் பற்றி என்ன அறிந்து வைத்திருக்கிறது என்பதை நாம் அறிந்துகொண்டு, அப்புறம் நாம் பாடத்துக்குச் செல்லவேண்டும். அப்போதுதான் அக்குழந்தை, தான் நினைத்து வைத்திருக்கும் நிலா பற்றி அறிவியல் பூர்வமாகவும் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். அதைவிட்டு, அக்குழந்தைக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்துக்கொண்டு நிலாவைப் பற்றி பாடம் எடுப்பதில் பயனில்லை. கல்வியில் உண்மையான கற்றல் நடைபெறவேண்டும் என்றால், ஒரு குழந்தையை கதை சொல்லவும், படைப்பாளியாக்கவும் அனுமதிக்க வேண்டும்.
நாம்: குழந்தைகளுக்கான இன்றைய திரைப்படங்கள், சித்திரக் கதைகளில் சூப்பர் ஹீரோக்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இது ஆரோக்கியமான போக்கா? சாமானிய மக்களின் வாழ்க்கையை, கதைகளாகப் புனையவேண்டிய தேவைஇருக்கிறதா?
நடராஜன்: சாதாரண மக்களின் கதைகளைத்தான் குழந்தைகள் விரும்பி ஏற்பார்கள். ஆனால், இப்போதைக்கு அமானுஷ்ய சக்தி வாய்ந்த மனிதர்களின் கதைகளை குழந்தைகள் விரும்புவதாக நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நாம்தான் இப்படியான கதைகளை அவர்களிடம் கொண்டுபோய் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய காகமும் நரியும் கதை, எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது தெரியுமா உங்களுக்கு ? நம்முடைய கதையில் காக்கா, பாட்டியிடமிருந்து வடையைத் திருடிக்கொண்டு ஓடிவிடும். ஆனால், இதுவே சீனக் கதையில் மிக அற்புதமாக மாற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. வடை சுட்டுக்கொண்டிருக்கும் பாட்டியிடம் ஒரு காக்கை, தான் தேடிக் கண்டுபிடித்த காய்ந்த சுள்ளிகளைக் கொண்டுபோய் போடுகிறது. அந்தச் சுள்ளிகளை வைத்து அடுப்பெரிக்க முடிந்த அந்தப் பாட்டி, காக்கையின் உழைப்புக்காக ஒரு வடையைப் பரிசாகக் கொடுக்கிறாள். அதை வாங்கிக்கொண்டு மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கையை, நரி ஏமாற்றி வடையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறது. காக்கை 'கா.. கா..' என்று கத்தி, தன் இனத்தவர்களை அழைக்கிறது. நூற்றுக்கணக்கான காகங்கள் வந்து சேர்ந்துவிடுகின்றன. உழைப்¬பவனின் உழைப்பைச் சுரண்டுகிறவனைச் சும்மா விடாதே என்று நரியின்மேல் பாய்கின்றன. காக்கைகளுக்கு அன்றைக்கு அந்த ஒரு வடை மட்டுமல்ல; நரியும் உண்ணக் கிடைத்தது என்று கதையை முடிக்கிறார் ஆசிரியர். இப்படிப்பட்ட கதைகளைத்தான் நாங்கள் வரவேற்கிறோம். எங்களைப் போன்ற புதிய எழுத்தாளர்கள், குழந்தைகளுக்காகக் கதை சொல்ல வந்தவர்கள். வெறும் கதைகளை மட்டும் நாங்கள் சொல்லுவதில்லை. அக்கதைகளுக்குள் பல மந்திரங்களையும் தந்திரங்களையும் அடிநாதமாக வைக்கிறோம். நம்முடைய தர்மங்களுக்கும் நியாயங்களுக்கும் சரியான இடம் கிடைக்கவேண்டும் என்று விதைக்கிறோம். உழைப்பாளர்களான சாதாரண மக்களின் வாழ்க்கையையும் இந்த உத்தி கொண்டுதான் நாங்கள் கதை தொடுக்கிறோம். இப்படியான கதைகளைத்தான் குழந்தைகள் ஏற்றுக்கொள்கிறார்கள். சூப்பர் ஹீரோ கதைகளைக் கொடுப்பவர்கள் கொடுத்துக்கொண்டு இருக்கட்டும். உண்மையில் எங்களைப் போன்றோரின் கதைகளைத்தான் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதற்கு, விற்பனையாகும் எங்களது நூல்களே சான்று.

நாம்: தமிழில் குழந்தை இலக்கியத் துறையில் நாமக்கல் கவிஞர்கள் அழ.வள்ளியப்பா, ஆலந்தூர்.கோ.மோகனரங்கன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, வாண்டுமாமா என்று ஒரு பரம்பரையே இருந்தது. இப்போது அதன் நீட்சி இருக்கிறதா? உங்கள் கதை மரபு பற்றிச் சொல்லுங்கள்…
நடராஜன்: எல்லா இலக்கியங்களையும் எடுத்தாண்ட சுப்பிரமணிய பாரதி, குழந்தைகள் இலக்கியத்தையும் தொட்டுச் சென்றிருக்கிறான். அவனது பாடல்களின் வழியே போனவர் அழ.வள்ளியப்பா. அவரது பாடல்களில் உழைப்பையும் கலந்து, அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்படியான பாடல்கள் பலவற்றைப் புனைந்திருக்கிறார்.
"மழை வருது! மழை வருது! நெல் அள்ளுங்க!
முக்கால் புடி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க!
ஏர் ஓட்டுற மாப்புளைக்கு விருந்து வைய்யுங்க!
சும்மா கிடக்குற மாப்புளைக்கு சூடு வைய்யுங்க!"
என்று ஒரு பாடல் எழுதியுள்ளார். இவை எல்லாம் சாதாரண விஷயங்கள் அல்ல. இதையெல்லாம் கேட்டுத்தான் நாம் வளர்ந்திருக்கிறோம். அவ்வையின் ஆத்திச்சூடியை எல்லாம் குழந்தையிடம் கொண்டு செல்வோம். புதிய ஆத்திச்சூடியை பாரதியும் படைத்திருக்கிறான். ஏனெனில், குழந்தைகள் இவற்றைப் படிப்பார்கள் என்று அவனுக்குத் தெரியும். வருங்கால அறிவியலைப் பற்றியும் எழுதுகிறான். இந்த பாரதியிடமிருந்து அறிவியலை எடுத்துக்கொண்டவர்களில் சிங்காரவேலர், அதன்பின் பூவண்ணன், வாண்டுமாமா ஆகியோரின் பங்களிப்பைக் குறைத்து மதித்துவிட முடியாது. இவர்களின் வரிசையில்தான் நானும் இயங்கி வருகிறேன்.

நாம்: பூந்தளிர், பாலமித்ரா, ரத்னபாலா, கோகுலம், அம்புலிமாமா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய புரட்சியே நடந்துகொண்டிருந்தது. இப்போது இவற்றில் பலவும் காணாமல் போய்விட்டன. இது இயல்பானதா? நாம் இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

நடராஜன்: இன்றைக்கு இருக்கும் குழந்தைகளை வாசிக்க வைப்பது என்பது பெரிய சவால்! இன்றைய குழந்தை வேறு, அன்றைய குழந்தை வேறு. 80களுக்கு முன் இருந்த கல்விமுறை வேறு. அதன்பின் ராஜீவ் அரசு கொண்டுவந்த கல்விமுறை வேறு. 80களுக்கு முந்தைய கல்வி – வாசிப்பை, மனிதநேயத்தை வளர்த்த கல்வியாக இருந்த்து. இன்றைய கல்விமுறை டாக்டராக வேண்டும், இஞ்சினியராக வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்துகின்ற கல்வியாக இருக்கிறது. ஒரு வகுப்பில் படிக்கும் எல்லாக் குழந்தைகளுமே முதல் வகுப்பில் வெற்றிபெற வேண்டும் என்ற போராட்டத்தின் கட்டாயத்தால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் பாடப்புத்தகத்தைவிட்டு, வேறு புத்தகத்தைப் படிக்கவைப்பதே பெரும் சவால். இப்படியான அவலமான சமூகத்தை நாம் உருவாக்கி விட்டிருக்கிறோம். இவை தவிர வீடியோ கேம்ஸ், தொலைக்காட்சிகள் என்று வாசிப்பைப் போக்கடித்த காரணிகள் நிறைய இருந்தாலும், வாசிப்பை மீட்டெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குழந்தைகள் ஏறி விளையாடிய மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு, விளையாடவே வெளியே செல்லவில்லை என்று குழந்தைகளைக் குறைகூறி என்ன பயன்? இன்றைக்கும் கோகுலம், சுட்டி விகடன் மாதிரியான சிறுவர் பத்திரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், அவை எவ்வளவு தூரம் பரவலாகச் சென்றடைகின்றன என்பதை நாம் கவனிக்கவேண்டும். இச்சூழ்நிலையில்தான் குழந்தைகளுக்காக நான் எழுதிய 71 நூல்களும் குறைந்தது மூன்று பதிப்புகள் கண்டிருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வாசிப்பைச் சுவாசிப்பாக்கும் பணியை எல்லோரும் சேர்ந்து செய்யவேண்டும். இதில் நீங்கள், நான், மக்கள் என்று எல்லோருக்கும் பங்கு உண்டு.
நாம்: அறிவியல் புனைகதைகளின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லுங்கள்…

நடராஜன்: ஆர்தர் சி க்லார்க் (Arthur C. Clarke), ஐசக் அசிமோவ் (Isaac Asimov) போன்றோரெல்லாம் தலைசிறந்த அறிவியல் புனைகதையாசிரியர்கள். ஆர்தர் சி க்லார்க் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய '2001: A Space Odyssey' என்ற நாவலில், அவர் குறிப்பிட்ட செயற்கைக்கோள்கள்தான் இன்றைக்கு நிஜமாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றன. ஐசக் அசிமோவ், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குள் இன்றைக்கு நமது அலுவலகங்கள் இயந்திரமயமாக மாறும் என்பதை அன்றே சொன்னானே! அதைத்தானே நாம் செய்துகொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட அறிவியல் புனைகதை என்பது, பிற்காலத்தில் ஏற்படக்கூடிய கற்பனாவாத விஷயங்களை முன்வைத்து பெரும் ஊக்குவிப்பைச் செய்கிறது. இந்த அடிப்படையில்தான் சுஜாதா போன்றோர் அறிவியல் புனைகதைகளை எழுதினார்கள். மாலன் கூட அருமையான இரண்டு அறிவியல் புனைகதைகளை எழுதியிருக்கிறார். இரா.முருகன் முதலாக நான் உட்பட இப்போது பெரிய கூட்டமே அறிவியல் புனைகதைகளை எங்களுக்கான தனித்தன்மையோடு எழுதி வருகிறோம். வகுப்பறைகளில் ஆசிரியர் கொடுக்கமுடியாத த்ரில்லை அறிவியல் புனைகதைகள் வாயிலாகக் கொடுத்து வருகிறோம். பெரியவர்கள், சிறியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் இதனை அணுகமுடியும் என்பதால் இவை அவசியமானதும்கூட!

நாம்: பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான பிரெய்லி முறையில், போதுமான அளவுக்கு சிறுவர் நூல்கள் உள்ளனவா? தங்களது 'year of zero' நூல் மூலம் கிடைத்த அனுபவம் பற்றி…

நடராஜன்: 'year of zero' என்பது பூஜ்ஜியமாம் ஆண்டு என்ற தமிழ்ப் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஒர் அறிவியல் போட்டியின் மூலம் தேர்வாகும் குழந்தைகள், விண்வெளிக்குச் செல்வதாகக் கதை. அதில் ஒரு பார்வையற்ற குழந்தையும், ஜுரத்தினால் பேசும் சக்தியை இழந்துவிட்ட ஒரு சிறுவனும் நான்கு பேரில் இருவராகத் தேர்வாகிறார்கள். பேச முடியாதவர்களையும், கண் தெரியாதவர்களையும் நீ அனுப்புவியா? என்று சமூகத்தை நோக்கி அதில் கேள்வி எழுப்பியிருப்பேன். உண்மையில் சாதாரணமானவர்களை விட, பார்வையற்றவர்களுக்கு நுண்ணுணர்வு அதிகம். அதனால் அந்தப் பாத்திரப்படைப்பு படைக்கப்பட்டது. இன்று நாம் காணும் எந்த விளம்பரத்திலாவது, மாற்றுத்திறனுடைய குழந்தைகளைக் காட்டுகிறார்களா என்று யோசிக்க வேண்டும். ஏன், அவர்கள் உயிர் இல்லையா? எல்லாக் குழந்தைகளுமே 'கொழுக் மொழுக்' என்றுதான் இருக்குமா அல்லது இருக்கவேண்டுமா? என்ன அரசியல் இது? இதனாலேயே இப்படைப்பு எழுதப்பட்டது. அப்போது நண்பர் ஜின்னாவின் பெரும் முயற்சியால், தமிழில் பிரெய்லி முறையில் முதலில் வந்த புத்தகம் பூஜ்ஜியமாம் ஆண்டு. பார்வையற்ற வாசகர்களுடன் இலக்கியச் சந்திப்பு எல்லாம் நடத்தினோம். பிறவிப்பயன் என்று ஒன்று இருக்குமேயானால், ஒரு எழுத்தாளனாக அந்தச் சந்திப்பில்தான் நான் அதை அடைந்தேன் என்று சொல்லமுடியும்.

நாம்: பிற இந்திய மொழிகளில் குழந்தை இலக்கியம் எப்படி இருக்கிறது?
நடராஜன்: மராத்தி மொழியில், குழந்தைகளையே ஆசிரியர்களாகக் கொண்டு ஒரு குழந்தைகள் பத்திரிக்கை இருக்கிறது. அடுத்து கன்னடம். அங்கே வரக்கூடிய எல்லா வெகுஜன இதழ்களிலும், குழந்தைகளுக்கு என்று பத்து பக்கங்கள் ஒதுக்குகிறார்கள். அதில் குழந்தைகள் படைப்புகள், அவர்களைப் பற்றிய செய்திகள் எல்லாம் வருகின்றன. இதெல்லாம் தமிழிலும் நடந்தால் நன்றாக இருக்கும். சிந்தி மொழியில், கல்வித்துறையே குழந்தைகளுக்கான ஒரு பத்திரிக்கையை நடத்துகிறது. நாம் போகவேண்டிய தூரம் இன்னும் இருந்தாலும், என்னுடன் பயணம் செய்யும் யூமா வாசுகி, விழியன், சரவணன் போன்ற படைப்பாளிகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறார்கள். சுட்டி விகடனும் கோகுலமும் சிறுவர் இலக்கியத்திற்காகச் செய்துவரும் பணி, நம்பிக்கையூட்டும் விதத்தில் இருக்கிறது.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக