புதன், 11 மார்ச், 2015

கொறிக்க! சிரிக்க! -2


வியாசர் சொல்ல மகாபாரதத்தை பிள்ளையார் விறுவிறு என்று எழுதினார்.

உலகத்தின் மொத மொத ஸ்டெனோகிராபர்.


இருளர் பெண்கள், வாலிபர்களிடம் வெற்றிலைப் பாக்கு வாங்கிப் போட்டு காதலை வெளிப்படுத்துவார்களாம்.

வாய் சிவந்தால் திருமணம். இல்லாவிடில் போய்யாவா?

*
மே.வங்கத்தில் கழிவறைகளுக்காக 122 கி.மீ. மனிதச் சங்கிலி போராட்டம்.

தனித்துப் போக வேண்டிய இடத்துக்காக கூட்டமாகப்  போராட்டமா?

*
அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்னையில் தமிழில் பேசி, பாடி அசத்தினார்.

செப்பு மொழி பதினெட்டு உடையாளாக உருவாகிறாரா.


நியூட்டனுக்கு முன்பே ஆர்யபட்டர் புவிஈர்ப்பு விசை பற்றி அறிந்திருந்தார்.

அடிக்கடி இப்படித் தூக்கிப் போட்டால்தான் காதுகளில் நம் நாட்டவரின் பெருமை விழும்.


முலாயம்-லாலு இல்லத் திருமண சடங்கில் மோடி உற்சாகத்துடன் பங்கேற்பு.

 


விருந்தில் கிச்சடி இடம்பெற்றிருந்திருக்கும்.

*
புதுக்கோட்டைக்  கலைஞர்,  குண்டு பல்புகளில் உளியால் பெயர் வெட்டுகிறார்.

அப்படியாவது சில பெயர்கள் வெளிச்சத்துக்கு வரும்.

*
சந்திரகுப்த மவுரியரின் கிரேக்க மனைவியான ஹெலன்தான் புடைவையை அறிமுகப்படுத்தினாராம்.

ஹெலன் பாரம்பரிய பட்டுகள் என்ற பெயரில் இன்னும் ஏன் புடைவைகள் வரவல்லை?

*
நூறு வருடங்களுக்குப் பிறகு ஷெர்லாக்ஸ் ஹோம் எழுதிய கதை கண்டுபிடிப்பு.

கண்டுபிடித்தவர் உபயோகித்தது பூதக் கண்ணாடி அல்ல. டெலஸ்கோப்!

*
உணவகப் பெட்டிகளை நீக்க ரயில்வே அமைச்சகம் திட்டம்.

அவர்களாலேயே உணவின் தரத்தை சகிக்க முடிவில்லையா?

*
மாத்திரைகளை மதுவுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது — மருத்துவ எச்சரிக்கை.

மருந்தாக மதுவை சாப்பிட ஆரம்பித்தாலும் தொல்லைதான்.

*
'சாம்பார்', 'கில்லாடி' மராத்தி மொழிச் சொற்களாம்.

ஆனால் சாம்பார் வைப்பதில் தமிழ்ப் பெண்கள்தான் கில்லாடிகள்.

*
தமிழக கைதிகளிலிருந்து சென்ற ஆண்டு 4000 செல்போன்கள் பறிமுதல்.

செல்லிலான் பெற்றிழந்தான் என உழந்தான் கடுந்துயரம் என கைதிகள் அவதிப்படுவார்களா?

*

காஜல் அகர்வால் ஷூட்டிங் இல்லாதபோது மேக் அப் போட்டுக்கொள்வதில்லையாம்.

கண்களுக்கு காஜல் கூடவா?

*
ஆடுகளின் நீல நாக்கு நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு.

மனிதர்களின் கரிநாக்குக்கும் தடுப்பு மருந்து கிடைக்குமா?

*
முகமது அலியின் கையுறைகளின் விலை ரூ.6 கோடி. 

இது ஒரு குத்து மதிப்பாகத்தான் இருக்கும்

*
மலிவு விலையில் வாங்கிய ஜட்டி இறுக்கமாக இருந்ததால் அவையிலிருந்து அவசரமாக ஓடிய கனடா எம்.பி.

ஒரு எம்.பி.யின் பட்ஜெட் அவ்வளவு டைட்டாகவா இருக்கும்?

*
சென்னையில் பூனை மாமிசம் ஆட்டுக்கறியாக விற்கப்படுகிறதாம்.

பூனைக்கு இப்படி ஒரு காலம் வரவேண்டாம்!

*
தாய்லாந்தில் யானைக் காலால் மசாஜ் செய்துகொள்கிறார்களாம்.

யானைக்கு அடி சறுக்காமல் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்தானே?

*
இரண்டாவது நான்காவது சனிக்கிழமைகள் வங்கி விடுமுறையாம்.

முதலாவது மூன்றாவது சனிக்கிழமைகளில் ஸ்ட்ரைக் இருக்கலாம்.

*

*செல்லக் குரங்குக்கு சொத்துகளை எழுதிவைத்த இந்திய தம்பதியர்.

இந்தக் குரங்கு இனி வங்கிகளின் கிளைக்குக் கிளை தாவிக்கொண்டிருக்கும்.

*
பதவிக்கு வந்த ஆம் ஆத்மியினர் சொகுசு காரில் சவாரி. தலையில் தொப்பியும் காணோம்.

தேர்தல் குளிர் விட்டுப்போனதால், கெஜ்ரிவாலின் மஃப்ளரும் மறைந்திருக்கும்.

*
கொலம்பிய பல்கலைக் கழக ஆசிரியையின் பெயர் 'ஏ'ல் ஆரம்பித்து 'இசட்'டில் முடிகிறதாம்.

இனிஷியலுக்கு என்ன செய்தார்?

*
பாண்டிச்சேரியில் பார்கள் இனி இரவு 12 மணிவரை திறப்பு.

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டிகளைப் பிடிக்கத்தானே?

*****

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக