வியாழன், 19 மார்ச், 2015

பிளஸ் 2 கணிதத் தேர்வு:'சென்டம்' வாங்குவோரின் எண்ணிக்கை குறையும்.?

பிளஸ் 2 கணிதத் தேர்வு கேள்வித்தாள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு,'ஈசி'யாகவும், மெட்ரிக்
பள்ளி மாணவர்களுக்கு, கடினமாகவும் இருந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட,
கணிதத்தில், 'சென்டம்' வாங்குவோரின் எண்ணிக்கை குறையும் என கல்வித் துறையினர் அச்சம்
அடைந்துள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று கணிதம் - அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு கணிதத்துக்கும், அறிவியல்பிரிவு மாணவர்களுக்கு, விலங்கியலுக்கும் தேர்வு நடந்தது. கணித வினாத்தாள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு,'ஈசி'யாகவும், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு கடினமாகவும் இருந்தது. ஆண்டுதோறும் மாணவர்களும்,ஆசிரியர்களும் சில வினா - விடைகளை எதிர்பார்ப்பர். சிறப்பு வகுப்புகள், திருப்புதல் தேர்வு, வகுப்பறைத்தேர்வுகள் போன்றவற்றில், அந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். அவற்றில் இருந்து, தேர்வில், 10மதிப்பெண் வினாக்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்று, ஆசிரியர்கள் வழி காட்டுவர். ஆனால், நேற்றைய கணிதத் தேர்வில், சில வினாக்கள், இதுவரை தேர்வுகளில் கேட்காததாக இருந்தன. அதனால், மாணவர்கள், 'சென்டம்' வாங்குவது குறையும், என கல்வித் துறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கணித ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: இருநூறு மதிப்பெண்களுக்கு வினாத்தாள் இருந்தது.ஒரு மதிப்பெண்ணில் 40; ஆறு மதிப்பெண்களில், 10; 10 மதிப்பெண்களில், 10 வினாக்கள் எழுத வேண்டும். ஒரு மதிப்பெண் வினாக்களில், இரண்டு, 'வால்யூம்' புத்தகங்களில் உள்ள, 271 கேள்விகளில் இருந்து, 30கேள்விகள்; 'கம் புக்' என்ற தொகுப்பு புத்தகத்தில் இருந்து, 10 கேள்விகள் கேட்கப்பட்டன. பத்து மதிப்பெண்வினாக்களில், 62 மற்றும், 63வது கேள்வி இதுவரை ஆசிரியர்களே எதிர்பார்க்காதது. தொகுதி - 2 புத்தகத்தில்,5ம் பாட வினாக்களை, பொதுவாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தவிர்த்து விடுவர். இதுவரை தேர்வில் இடம்பெறாத இந்தக் கேள்வி, 'சாய்ஸ்' அடிப்படையில் இந்த ஆண்டு இடம் பெற்றுள்ளது. இக்கேள்விகள், கடினமாகஇருந்ததால், மாணவர்களின், 'சாய்ஸ்' குறைந்து, மற்ற கேள்விகளை எழுத தடுமாறினர். கட்டாய வினாவில், வகை நுண்கணித வினா கடினமாக இருந்தது. ஆண்டுதோறும் மாணவர்கள் எதிர்பார்க்கும் வெக்டரியலில், 'காஸ் ஏ பிளஸ் பி' என்ற வினா, இந்த ஆண்டு இடம் பெறவில்லை. மேலும், 69வது கேள்வியும் இதுவரை தேர்வுகளில் இடம் பெறாத, எதிர்பார்க்காத கேள்வி. நன்றாகப் படிக்கும்மாணவர்களுக்கு, 'சென்டம்' வாங்க கொஞ்சம் கடினமானதாகவே அமைந்துள்ளது. ஆனால், தேர்ச்சி இலக்கான மாணவர்களுக்கு கேள்விகள் எளிமை தான். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு, 3.5 லட்சம் மாணவ, மாணவியர் கணிதம் - அறிவியல் பிரிவில், கணிதத் தேர்வு எழுதினர். 8 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. மொத்தம், 3,882 பேர் கணிதத்தில் 'சென்டம்' வாங்கினர். 2013ல், 2,352; 2012ல் 2,656 பேர்கணிதத்தில், 'சென்டம்' வாங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக