சனி, 28 மார்ச், 2015

வாட்ஸ் அப்'பில் பிளஸ் 2 கணித வினாத்தாள், ':மேலும் நான்கு ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்

ஓசூரில், பிளஸ் 2 கணித வினாத்தாள், 'வாட்ஸ் அப்'பில், வெளியானது தொடர்பாக, தனியார்
பள்ளியைச் சேர்ந்த மேலும் நான்கு ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்.
ஓசூரில், கடந்த, 18ம் தேதி நடந்த, பிளஸ் 2 கணிதத் தேர்வின் போது, தனியார் பள்ளியில் தேர்வு
கண்காணிப்பாளராக பணியாற்றிய, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன்
ஆகியோர், தன் சக ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு, கணித
வினாத்தாளை மொபைல்போனில் புகைப்படம் எடுத்து, அதை, 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பினர். இதையறிந்த, எஸ்.எஸ்.ஏ., - சி.இ.ஓ., பொன்குமார் தலைமையிலான பறக்கும் படையினர், அவர்களிடம் இருந்துமொபைல்போனை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, சி.இ.ஓ., ராமசாமி கொடுத்த புகாரின் படி, மாவட்டகுற்றப்பிரிவு போலீசார், மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, நான்கு ஆசிரியர்களையும் கைதுசெய்தனர். அவர்களை, கடந்த, 24ம் தேதி, இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், நேற்று முன்தினம்,சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவ்விவகாரம் தொடர்பாக, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதகன் தன்ராஜ்உட்பட, ஐந்து கல்வித்துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், போலீஸ் காவலில் உள்ள நான்கு ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணையில், பிளஸ் 2 வினாத்தாள், 'வாட்ஸ் அப்'பில் வெளியானது தொடர்பாக, மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று மாலை, தனியார் பள்ளி ஆசிரியர்கள் சஞ்சீவ், மைக்கேல் ராஜ், விமல்ராஜ், கவிதா ஆகிய நான்கு பேரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக, கிருஷ்ணகிரி அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆசிரியர் மகேந்திரன் மூலமாக அனுப்பப்பட்ட வினாத்தாள், வாட்ஸ் அப் மூலம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், இது தொடர்பாக, மற்ற ஆசிரியர்கள் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, ஓசூர் ஜே.எம்., 2 நீதிபதி சுரேஷ்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் நான்கு பேரும், சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக