புதன், 18 மார்ச், 2015

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அடுத்த வாரத்தில்?

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது. இந்தத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிட்டது. அதன் பிறகு, பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு இந்தப் பட்டியல் அண்மையில் அனுப்பப்பட்டது. இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவித்தன.
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1,90,922 பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன. போட்டித் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. போட்டித் தேர்வு மதிப்பெண், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மதிப்பெண், பணி அனுபவத்துக்கான மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், உடற்கல்வி இயக்குநர் அளவிலான 27 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

Source :தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக