திங்கள், 20 ஏப்ரல், 2015

தமிழகம் முழுவதும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உண்ணாவிரதம் :மே 3ஆம் வாரத்தில் மாநில பொதுக்குழு கூடி அடுத்தகட்ட நடவடிக்கை

தமிழகம் முழுவதும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உண்ணாவிரதம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் மாநிலத்தின்
பல்வேறு பகுதிகளில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.தருமபுரியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற
உண்ணாவிரதப் போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் மே 3ஆம் வாரத்தில் மாநில பொதுக்குழு கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

திருச்சியில் சிந்தாமணி அண்ணாசிலைஅருகே ஜாக்டோஅமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சுமார் ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.மதுரையில் பழங்காநத்தத்தில் ஆசிரியர்கள்உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். இதே போல தூத்துக்குடியில் சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகேஉண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நீக்கம் செய்து பழைய ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என
அவர்கள் கோரிக்கை விடுத்தனர். திண்டுக்கலில் கல்லறை தோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.ஈரோட்டில் காளை மாடு சிலை அருகில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 2ஆயிரம் பேர் வரை பங்கேற்றனர்.

இதே போல பெரம்பலூர் வானொலி திடலிலும், அரியலூரில் அண்ணா சிலை அருகிலும்ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் திருவாரூர், கரூர்,நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டனர்.​

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக