வெள்ளி, 17 ஏப்ரல், 2015

ஹோமியோபதி மருத்துவமுறை:நினைவாற்றல் மேம்படுத்தும் சிறந்த மருந்துகள்!


""ஒரு மருத்துவர் நோயாளியை நேரில் பார்த்துப் பேச வேண்டிய அவசியம் இப்போது இல்லை. இப்போது நிறைய ஹோமியோபதி மருத்துவர்கள் போனிலோ, இணையத்தின் மூலமாகவோ நோயாளியைத் தொடர்பு கொண்டு மருத்துவம் செய்கிறார்கள்'' என்கிறார் ஹோமியோபதி மருத்துவரான ஜெயேஷ் வி.சங்வி. சென்னை வாலஸ் கார்டனில் உள்ள அவருடைய "நேச்சர் கிளினிக்'கில் அவரைச் சந்தித்தோம்.
 "" ஆங்கில மருத்துவத்துக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய மருத்துவமுறையாக ஹோமியோபதி மருத்துவத்தை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்திருக்கிறது. உயிருக்கு ஆபத்தான தருணங்களில் நோயாளிக்கு ஹோமியோபதி மருத்துவம் பயன்படுகிறது. 
 24 மணி நேரம்தான் உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளைக் கூட ஹோமியோபதி மருத்துவத்தால் காப்பாற்ற முடியும். சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. தைராய்டு பிரச்னையைச் சரி செய்ய முடியாது. இரத்த அழுத்தத்தைக் குணமாக்க முடியாது என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, இன்னொருபுறத்தில் நோயாளியின் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்க்கான, தைராய்டு பிரச்னைக்கான மருந்துகளைச் சாப்பிடச் சொல்வார்கள். இதனால் மருந்து தயாரிக்கும் கம்பெனிகளுக்குத்தான் லாபம். ஹோமியோபதி மருத்துவத்தில் அப்படிச் சொல்வதில்லை.
 சர்க்கரை நோய் வந்துவிட்டால் சிறுநீரகம், கண், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஹோமியோபதி மருத்துவமுறையில் இந்தப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். தைராய்டு சுரப்பி பிரச்னைகளைச் சரி செய்ய முடியும். இன்சுலினையோ, தைராக்ஸினையோ மருந்தாகக் கொடுத்துக் கொண்டே இருந்தால் அந்த நோயாளியின் உடல் உறுப்புகள் அந்தச் சுரப்புநீர்களைச் சுரக்கும் திறனை நாளடைவில் இழந்துவிடுகின்றன. மருந்து இல்லாமல் உயிர் வாழ முடியாதநிலை ஏற்பட்டு விடுகிறது. 
 ஹோமியோபதி மருத்துவமுறை நோய்க்கு மருந்து தருவதில்லை. நோயாளிக்கு - நோயாளியின் உடம்புக்கு மருந்து தருகிறது. உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தால் நோய் வருகிறது. ஹோமியோபதி மருத்துவம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துகிறது. அதன் மூலம் நோய் வராமல் தடுக்கிறது. கேன்சர், சிறுநீரகம் பழுதடைதல், கண்பார்வை பாதிப்பு ஆகியவற்றை இந்த மருத்துவமுறையின் மூலம் சரி செய்ய முடியும்.
 அதுமட்டுமல்ல, ஆஸ்துமா போன்ற நீண்ட கால நோய்களை ஹோமியோபதி மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். ஆட்டிஸம், டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை இந்த மருத்துவத்தின் மூலம் மேம்படுகிறது. 
 ஒரு நோயாளியின் உடலில் ஏற்படுகிற நோய்க்கான அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு ஹோமியோபதி மருத்துவமுறையில் அதற்கு மருந்து கொடுக்கிறார்கள். எனவே நோயாளியை நேரில் பார்க்காமல் தொலைபேசி மூலமாகவோ, இணையத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு அவர்கள் சொல்லும் நோய்க்கான அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு மருந்தை ஹோமியோபதி மருத்துவர்களால் முடிவு செய்ய முடிகிறது. மருந்தைக் கொரியர் மூலமாக அனுப்புகிறார்கள். ஆனால் அவசரமாக மருந்து தர வேண்டிய நிலை இருந்தால், மருந்தின் பெயர், அளவு எல்லாவற்றையும் போனில் சொல்லி நோயாளி இருக்கும் இடத்தில் அவர்களையே வாங்கிக் கொள்ளச் சொல்வார்கள். இப்படி தொலைதூர மருத்துவம் செய்வது ஏதோ தமிழ்நாட்டுக்குள் மட்டும்தான் என்று நினைத்துவிடாதீர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கும் இந்த மருத்துவத்தை இங்கிருந்து கொண்டே  செய்கிறார்கள். 
 ஹோமியோபதி மருத்துவத்தில் மனநலனை மேம்படுத்தும் சிறந்த மருந்துகள் உள்ளன. இப்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்பவர்கள் எப்போதும் மன இறுக்கத்துடன் இருக்கிறார்கள். ஓயாத டென்ஷன். அவர்களுக்கு இந்த மருத்துவமுறையில் நல்ல மருந்துகள் உள்ளன. நினைவாற்றலை மேம்படுத்தும் மருந்துகளும் உள்ளன. 
 ஒரு மாணவன் நினைவாற்றல் குறைவால் 40 மதிப்பெண்கள் எடுக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மாணவனுக்கு ஹோமியோபதி மருந்துகளைக் கொடுத்தால் நினைவாற்றல் மேம்படும். சில மாதங்களிலேயே 60-80 மதிப்பெண்கள் எடுக்கும் அளவுக்கு நினைவாற்றல் அதிகமாகிவிடும். 
 பிற மருத்துவமுறைகளில், மருத்துவச் செலவு அதிகமாகியிருப்பது, மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள் ஆகியவை மாற்று மருத்துவங்களை நோக்கி மக்களைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. எனவே முன்பைக் காட்டிலும் இப்போது நிறையப் பேர் ஹோமியோபதியை நாடி வருகிறார்கள். ஆனாலும் இப்படி வருகிறவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம். 
 அரசியல்வாதிகளையும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களையும் அணுகி ஹோமியபதி மருத்துவத்தைப் பிரபலபடுத்தலாம் என்றிருக்கிறோம். உதாரணமாக ஐடி கம்பெனிகளின் பணியாளர்களுக்கு மன அழுத்தம் அதிகம். ஐடி கம்பெனியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களை அணுகி, மன அழுத்தத்துக்கான மருத்துவம் செய்கிறோம் என்று சொன்னால், பல்லாயிரக்கணக்கான ஐடி பணியாளர்கள் இந்த மருத்துவமுறையின் சிறப்பைத் தெரிந்து கொள்வார்கள். அதுபோல அரசியல்வாதிகளின் கவனத்தைக் கவரும் நடவடிக்கைகளிலும் இறங்கி யிருக்கிறோம்.
 இதற்காக மும்பையில் "உலக ஹோமியோபதி உச்சி மாநாடு' ஒன்றை இம்மாதம் 11, 12 தேதிகளில் நடத்துகிறோம். உலக அளவில் ஹோமியோபதி மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், ஆய்வுகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்வதற்காகக் கூடுகிறோம். பலதுறை நிபுணர்கள் இதில் பங்கேற்கிறார்கள். நிச்சயம் இது அரசின் கவனத்தை இது ஈர்க்கும் என்று நம்புகிறோம்'' என்றார். 
 - 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக