செவ்வாய், 21 ஏப்ரல், 2015

TRB PG TAMIL :எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி : சிறப்பு விதிகள் - 1


 எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி : சிறப்பு விதிகள் - 1

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, எட்டு ஆகிய ஆறு என்ணுப்பெயர்கள்  பொதுவிதியில் கூறப்பட்ட விகாரங்கள் மட்டும் அல்லாமல், அவை ஒவ்வொன்றும் வேறு சில விகாரங்களையும் பெற்று வரும். அவற்றை நன்னூலார் சிறப்பு விதிகளில் குறிப்பிடுகிறார். எனவே இந்த ஆறு எண்ணுப்பெயர்களுக்கான புணர்ச்சி பற்றிப் பார்க்கும்போது பொதுவிதியில் கூறப்பட்ட விகாரங்களையும், சிறப்புவிதிகளில் கூறப்படும் விகாரங்களையும் மனத்திற்கொண்டு, அவற்றுள் ஏற்புடையனவற்றைக் கொள்ளவேண்டும்.

6.2.1 ஒன்று, இரண்டு

ஈற்று உயிர் மெய் கெட்டு நின்ற ஒன்று என்னும் எண்ணுப்பெயரில் உள்ள னகர மெய் ரகர மெய்யாக மாறும்; அவ்வாறு மாறியபின் அதனோடு உகரம் வந்து சேர்வதும் உண்டு. 

ஈற்று உயிர்மெய் கெட்டு நின்ற இரண்டு என்னும் எண்ணுப்பெயரில் உள்ள ணகர மெய்யும், ரகரமெய்யை ஊர்ந்து நின்ற அகர உயிரும் கெடும். அவ்வாறு கெட்டபின் நிற்கும் ரகரமெய்யின் மேல் உகரம் வந்து சேர்வதும் உண்டு. 

இரண்டு எண்களிலும் ரகரமெய்யுடன் உகரம் வந்து சேர்வது ஏற்புடைய இடங்களில் கொள்ளப்படும். ரகர மெய்யானது, வருமொழி முதலில் மெய்வரின் உகரம் பெறும்; வருமொழி முதலில் உயிர்வரின் உகரம் பெறாது.

சான்று:

ஒன்று + ஆயிரம் > ஒன்+ஆயிரம்> ஓன் + ஆயிரம் > 
                                         ஓர் + ஆயிரம் = ஓராயிரம்

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் று என்பது கெட்டு, முதல் குறில் ஒ என்பது ஓ என நீண்டு, சிறப்பு விதிப்படி னகர மெய் ரகர மெய்யாக மாறியது.

ஒன்று + கால் > ஒன் + கால் > ஒர் + கால் > 
                                                  ஒரு + கால் = ஒருகால்

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் று என்பது கெட்டு, சிறப்பு விதியின்படி னகரமெய் ரகரமெய்யாக மாறி உகரம் பெற்றது.

இரண்டு + ஆயிரம் > இரண் + ஆயிரம் > இர் + ஆயிரம் > 
                                 ஈர் + ஆயிரம் = ஈராயிரம்

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் டு என்பது கெட்டு, முதல்குறில் இ என்பது ஈ என நீண்டு, சிறப்பு விதிப்படி ணகரமெய் கெட்டு, ரகரமெய் மேல் நின்ற அகர உயிரும் கெட்டது.

இரண்டு + கால் > இரண் + கால் > இர் + கால் > 
                                                இரு + கால் = இருகால்

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் டு என்பது கெட்டு, சிறப்பு விதிப்படி ணகரமெய் கெட்டு, ரகரமெய் மேல் நின்ற அகர உயிரும் கெட, ரகரமெய் மீது உகரம் ஏறி வந்தது.

6.2.2 மூன்று

இறுதி உயிர்மெய் கெட்டு நின்ற, மூன்று என்னும் எண்ணுப்பெயரில் உள்ள னகரமெய், வருமொழி முதலில் உயிர் வந்தால் கெடுதலும், மெய் வந்தால் வருகின்ற மெய்யாகத் திரிதலும் ஆகும்.

சான்று:

மூன்று + ஆயிரம் > மூன் + ஆயிரம் > 
                                      மூ + ஆயிரம் = மூவாயிரம் 
மூன்று + உலகு > மூன் + உலகு > மூ + உலகு = மூவுலகு

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் று என்பது கெட்டது. சிறப்பு விதிப்படி வருமொழி முதலில் உயிர் வந்ததால் னகர மெய் கெட்டது. இடையில் வந்த வகரமெய் உடம்படுமெய்.

மூன்று + சந்தி > மூன் + சந்தி > முன் + சந்தி > 
                                            மு + சந்தி = முச்சந்தி 
மூன்று 
தமிழ் > மூன் + தமிழ் + முன் + தமிழ் > 
                                            மு + தமிழ் = முத்தமிழ்

பொதுவிதிப்படி ஈற்று உயிர் மெய் கெட்டு, மொழி முதல் நெடில் மூ என்பது மு எனக் குறுகியது. சிறப்பு விதிப்படி வருமொழி முதலில் மெய் வந்ததால், னகரமெய் வருகின்ற மெய்யாகத் திரிந்தது.

6.2.3 நான்கு

ஈற்று உயிர்மெய் கெட்டு நின்ற நான்கு என்னும் எண்ணுப் பெயரில் உள்ள னகரமெய், வருமொழி முதலில் உயிரும், இடையினமும் வரும்போது லகர மெய்யாகத் திரியும். வல்லினம் வரும்போது றகர மெய்யாகத் திரியும்; மெல்லினம் வரும்போது திரியாமல் இயல்பாய் நிற்கும்.

சான்று:

நான்கு + ஆயிரம் > நான் + ஆயிரம் > 
                                          நால் + ஆயிரம் = நாலாயிரம் 
நான்கு + வகை > நான் + வகை > நால் + வகை = நால்வகை

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் கு என்பது கெட்டு, சிறப்பு விதிப்படி உயிரும் இடையினமும் வர னகரமெய் லகர மெய்யாகத் திரிந்தது.

நான்கு + படை > நான் + படை > நாற் + படை = நாற்படை

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் கெட்டு, சிறப்பு விதிப்படி வல்லினம் வர னகரமெய் றகர மெய்யாகத் திரிந்தது.

நான்கு மணி > நான் + மணி = நான்மணி

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் மட்டும் கெட்டது. னகரமெய் இயல்பாக வந்தது. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்மணிக்கடிகை என்ற நூலினது பெயரை நினைவுகூர்க.

6.2.4 ஐந்து

ஈற்று உயிர்மெய் கெட்டு நின்ற, ஐந்து என்னும் எண்ணுப்பெயரில் உள்ள நகர மெய், வருமொழி முதலில் மெல்லினம் வரும்போது வருகின்ற மெய்யாகத் திரியும்; வல்லினம் வரும்போது அதற்கு இனமாகத் திரியும்; உயிரும் இடையினமும் வந்தால் கெடும்.

சான்று:

ஐந்து + மூன்று > ஐந் + மூன்று > ஐம் + மூன்று = ஐம்மூன்று

பொதுவிதிப்படி ஈற்று உயிர் மெய் து என்பது கெட்டு, சிறப்பு விதிப்படி நகரமெய், வருகின்ற மகரமெய்யாகத் திரிந்தது.

ஐந்து + பொறி > ஐந் + பொறி > ஐம் + பொறி = ஐம்பொறி

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் கெட்டு, சிறப்பு விதிப்படி நகரமெய் வல்லினம் வர அதற்கு இன மெல்லினமாகத் திரிந்தது.

ஐந்து + ஆயிரம் > ஐந் + ஆயிரம் > ஐ + ஆயிரம் = ஐயாயிரம்
ஐந்து + வகை > ஐந் + வகை > ஐ + வகை = ஐ வகை

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் கெட்டு, சிறப்பு விதிப்படி உயிரும் இடையினமும் வர நகரமெய் கெட்டது. ஐயாயிரம் என்பதில் இடையில் வந்த யகரமெய் உடம்படுமெய். (ஐ + ய் + ஆயிரம் = ஐயாயிரம்)

6.2.5 எட்டு

ஈற்று உயிர்மெய் கெட்டு நின்ற எட்டு என்னும் எண்ணுப்பெயரில் உள்ள டகர மெய் ணகர மெய்யாகத் திரியும்.

சான்று:

எட்டு + ஆயிரம் > எட் + ஆயிரம் > எண் + ஆயிரம் = எண்ணாயிரம்
எட்டு வகை > எட் + வகை > எண் + வகை = எண்வகை

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் கெட்டு, சிறப்பு விதிப்படி டகர மெய் ணகர மெய்யாகத் திரிந்தது.

  • ஆறு, ஏழு
  • ஆறு, ஏழு என்னும் எண்ணுப்பெயர்கள் புணர்ச்சியில் பொதுவிதியில் கூறப்பட்ட விகாரங்களை மட்டுமே பெற்றுவரும். இவற்றிற்குச் சிறப்பு விதி இல்லை.

     

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக