புதன், 29 ஜூலை, 2015

TRB PG TAMIL :தொல்காப்பியம், நம்பியகப் பொருள் கூறும் திணைப்பொருள்கள்


தமிழ் இலக்கண உலகில் அகப்பொருள் இலக்கணத்தை முழுமையாகக் கூறும் நூல்களில் முதன்மையானது தொல்காப்பியம். இத் தொல்காப்பியத்திலும் அதன் பின்னர் வந்த அகப்பொருள் இலக்கண நூலான நம்பியகம் பொருளிலும் உள்ள அகத்திணையியலில் கூறப்பட்டுள்ள ஐந்திணைப்பொருட்களான முதல், கரு, உரி என்ற மூன்று பொருள்கள் பற்றிய செய்திகளை எடுத்துக்காட்டி ஒப்பீட்டு நிலையில் விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

திணைப்பொருள்கள்:

தொல்காப்பியம் ஐந்திணைகளுக்குரிய பொருள்களாக முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் (தொல் பொருள் 3) என்ற மூன்றினைக் கூறுகின்றது. இதைப் பின்பற்றியே நம்பியகப் பொருளும் ஐந்திணைப்பொருள்களாக இம்மூன்றையும் கூறுகின்றது. (நம்பி.7).

முதற்பொருள்:

மேற்கூறிய மூன்று திணைப்பொருள்களுள் முதற்பொருள் என்பது நிலம், பொழுது என்ற இருவகையினை இயல்பாகக் கொண்டுள்ளது (தொல், பொருள் 4.19) எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. நம்பியகப்பொருளும் முதற்பொருளாக இவ்விரண்டையும் கூறுகின்றது. (நம்பி.8) தொல்காப்பியமும், நம்பியகப் பொருளும் மேற்கூறியவாறு ஒன்றுபட்ட கருத்துக்களுடன் காணப்பட்டாலும் ஒரு சில வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன என்பதை பின்வரும் செய்திகளின் மூலம் அறியலாம்.

நிலம்:

முதற்பொருள்களுள் ஒன்றாகிய நிலம் பற்றித் தொல்காப்பியம், மாயோன் மேய காடுறை உலகமும் சேயேன் மேய மை வரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும், முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச், சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (தொல்.பொருள் – 5) எனக் கூறுகின்றது. தொல்காப்பியம் காடு, வரை, தீம்புணல், பெருமணல் என நிலம் பற்றி மட்டும் இங்கு கூறாது. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற திணைகள் பற்றியும் கூறுகிறது. காரணம் முன்பு கூறப்படும் ஏழு திணைகளுள் நிலம் பெறுவன "நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய" எனக் கூறுப்பட்டுள்ளதே தவிர அத்திணைகளுக்குரிய பெயர்கள் சுட்டப்படவில்லை. எனவே இங்கு நிலங்கள் பற்றிக் கூறுகையில் அந்நிலங்களுக்குரிய திணைப்பெயர்களும் சுட்டப்பட்டன எனலாம். மேலும் பாலைத் திணைக்கு நிலமில்லை என்று முற்கூறப்பட்டதால் பெயரும் இங்கு சுட்டப்படவில்லை எனக் கருதலாம்.

தொல்காப்பியம் முதற்பொருளாகிய நிலத்தை மட்டுமல்லாது கருப்பொருள்களுள் ஒன்றாகிய தெய்வம் பற்றியும் சுட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. காரணம் என்னவெனில் தொல்காப்பியம் கருப்பொருள்கள் பற்றிக் கூறுகையில் பொதுவாகக் கூறியுள்ளதே தவிர ஒவ்வொரு திணைக்குரிய கருப்பொருள்கள் பற்றிக் கூறவில்லை. எனவே கருப்பொருள்களுள் தெய்வம் முதன்மையாகக் கருதப்படுவதால் இங்கு நிலங்களைப் பற்றிக் கூறுகையில் அந்நிலங்களைக் காக்கும் தெய்வங்கள் பற்றியும் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது எனலாம். மேலும் பாலை நிலம் இன்னதென்று சுட்டப்படாமையால் தெய்வமும் சுட்டப்படவில்லை எனக் கருத இடமுண்டு.

நம்பியகப்பொருள் பற்றிக் கூறுகையில் வரை, சுரம், புறவு, பழனம், திரை அவற்றின் நிமித்தம் எனப் பத்து வகைப்படும் என்று கூறுகின்றது (நம்பி 9). இவ்வாறு நிலம் பற்றிக் கூறுவதற்கு முன்பே நம்பியகப் பொருள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் (நம்பி. 6) என ஐந்திணைகளுக்குரிய பெயர்களைக் கூறியுள்ளமையால் தொல்காப்பியம் போன்று இங்கு திணைப்பெயர்கள் சுட்டப்படவில்லை எனலாம்.

தொல்காப்பியர் காடு, தீம்புனல், பெருமணல் என்று கூறியுள்ளதை நாற்கவிராசர் புறவு, பழனம், திரை என்ற சொற்களால் குறிப்பிட்டுள்ளார். காலத்திற்கு ஏற்ப சொற்களும் மாறுபட்டுள்ளது எனலாம். ஆனால் நம்பியகப் பொருள் பாலைத் திணைக்குறிய நிலமாகச் சுரத்தைக் கூறியுள்ளது. பத்துப்பாட்டுள் "பாலை சான்ற சுரஞ் சார்ந்ததொரு சார்" (மதுரைக் காஞ்சி) எனக் கூறியுள்ளமையாலும் பிறவற்றாலும் இவ்வாறு நம்பியகப் பொருள் பாலைத்திணைக்குரிய நிலமாக சுரத்தைக் குறிப்பிட்டுள்ளது எனலாம்.

பொழுதுகள்:

தொல்காப்பியம், காரும், மாலையும் முல்லை (தொல். பொருள்.6) கூதிரும் யாமமும் முன்பனியும் குறிஞ்சி (தொல். பொருள். 7,8), வைகறை விடியல் மருதம் (தொல். பொருள். 9) ஏற்பாடு நெய்தல் (தொல். பொருள். 10), நண்பகல், வேனில் பின்பனி பாலை (தொல். பொருள். 11) என ஒவ்வொரு திணைக்குரிய பெரும்பொழுது சிறுபொழுதுகள் பற்றிக் கூறுகின்றது. நம்பியகப்பொருள் பெரும்பொழுதுகள் ஆறு (நம்பி.11) என்றும், சிறுபொழுதுகள் ஐந்து (நம்பி 12) என்றும் வகைப்படுத்திக் கூறிவிட்டுப் பின்பு தொல்காப்பியம் போன்று குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் (நம்பி 13-17) என ஒவ்வொரு திணைக்குரிய பெரும் பொழுது, சிறுபொழுது பற்றிக் கூறுகின்றது.

தொல்காப்பியர் சிறுபொழுது ஆறு எனக் கொண்டதை நாற்கவிராசர் ஐந்தாகக் கொள்கின்றார். வைகறை விடியல் என்று தொல்காப்பியம் தனியாகக் கூறியுள்ளதை நாற்கவிராசர் வைகறை என்பது விடியல் காலத்தைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். தொல்காப்பியம் மருதம், நெய்தல் ஆகிய இரண்டு திணைகளுக்கும் உரிய பெரும் பொழுதுகள் பற்றி நூற்பாவின் வழி சுட்டவில்லை என்றாலும் இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் அறுவகைப் பெரும்பொழுதுகளும் இவ்விரு திணைகளுக்கும் உரியன (தொல். பொருள் பக் 11) எனக் கூறியுள்ளார். இவ்வுரையாசிரியரின் கருத்துப்படி நம்பியகப்பொருள் இவ்விரு திணைகளுக்கும் ஆறு பெரும்பொழுதுகளுக்கும் உரியன (நம்பி, 18) என நூற்பாவில் கூறி விளக்குகின்றது. இவ்வாற முதற்பொருள் பற்றிய கருத்துக்களில் இரு நூல்களும் ஒரு சிலவற்றில் வேறுபடுகின்றன.

கருப்பொருள்கள்:

தொல்காப்பியம் ஐந்திணைக்குரிய கருப்பொருள்களாகத் தெய்வம், உணவு, மா, மரம், புள், பறை, செய்தி, யாழ் போன்ற எட்டு வகைகளோடு "அவ்வகை பிறவும் கருவென மொழிப" (தொல். பொருள் 20) எனக் கூறுகின்றது. தொல்காப்பியர் கூறிய "அவ்வகை பிறவும்" என்பதற்கு, அத்தன்மைய பிறவும் கருப்பொருள் என்று கூறுவதோடு, எந்நில மருங்கிற் பூவும், புள்ளும், அந்நிலம் பொழுதோடு வாரா வாயினும் (தொல். பொருள்.21) எனக் கூறியுள்ளதால் நிலமும் காலமும் பற்றி வருவன கருப்பொருள் என்று உணர்க என்று இயம்பூணார் தம் உரையில் கூறுகின்றார்.

நச்சினார்க்கினியர், இன்னும் பிறவு மென்றதனாலே இங்கு கூறியவற்றிற்குரிய மக்கள் பெயருந் தலைமக்கள் பெயருங் கொள்க. அவை பெயரும் வினையும் (தொல். பொருள்.22) என்னும் நூற்பாவில் தொல்காப்பியர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதோடு பிறவுமென்றதனால் கொள்வன சிறுபான்மை திரிவுபடுதலின் பிறவுமென்று அடக்கினார் என்றும் கூறுகின்றார். நம்பியகப்பொருள் பிற என்பதற்குத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூறிய கருத்துக்களைத் தழுவி ஐந்திணைக்குரிய கருப்பொருள்களாக ஆரணங்கு, உயர்ந்தோர், உயர்ந்தோரல்லாதவர், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் எனப் பதினான்கினைக் கூறுகின்றது. மேலும் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் (நம்பி 20 – 24) என ஒவ்வொரு திணைக்குரிய கருப்பொருள்களையும் தனித்தனியாக நூற்பாக்களின் மூலம் விளக்கிச் செல்கின்றது. இவ்வாறு கருப்பொருள்கள் பற்றிய கருத்து வளர்ச்சியை நம்பியகப்பொருளில் காணலாம்.

உரிப்பொருள்கள்:

தொல்காப்பியம் திணைக்குரிய உரிப்பொருள்கள் பற்றிக் கூறுகையில் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை தேருங்காலைத் திணைக்குரிப்பொருளே எனக் கூறுகின்றது. இதற்கு இளம்பூரணர் ஏனைய மொழிந்த பொருளோடொன்ற வைத்தல் (மரபு.110) என்னும் தந்திர உத்தியால் புணர்தல் என்பது குறிஞ்சிக்கும், இருத்தல் என்பது முல்லைக்கும், இரங்கல் என்பது நெய்தலுக்கும், ஊடல் என்பது மருதத்திற்கும் பெரும்பான்மையும் உரியதாகவும் சிறுபான்மை எல்லாப் பொருளும் எல்லாத் திணைக்கும் உரியதாகவும் கொள்ளப்படும் என்று கூறுகின்றார் (தொல். பொருள், பக். 16). இக்கருத்து உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (தொல்.பொருள். 15) என்ற தொல்காப்பியரின் கருத்திற்கு மாறுபட்டதாக உள்ளது. இந்நூற்பாவில் தேருங்காலை எனக் கூறியிருப்பதால் குறிஞ்சிக்குப் புணர்ச்சியும், பாலைக்கு பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தலுக்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும் அவ்வவ்நிமித்தங்களுக்கும் உரியதென்று ஆராய்ந்துணர வேண்டும் என நச்சினார்க்கினியர் கூறுகின்றார்.

தொல்காப்பியக் கருத்தைப் பின்பற்றி நம்பியகப்பொருளும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கள் அவற்றின் நிமித்தம் என உரிப்பொருள்கள் பத்து வகைப்படும் எனறு கூறுகின்றது (நம்பி 25). உரிப்பொருள்களின் வைப்பு முறையில் மாற்றமுள்ளதே தவிர வேறு மாற்றங்கள் இல்லை எனினும், முத்திறப் பொருளும் தத்தம் திணையோடு, மரபின் வராது மயங்கலும் உரிய (நம்பி 251) என நம்பியகப் பொருள் கூறியிருப்பதன் மூலம் தொல்காப்பியரின் உரிப்பொருள் மயங்கி வராது என்ற கருத்தோடு மாறுபட்டிருந்தாலும் இளம்பூரணர் கூறிய கருத்தினை ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அறியலாம்.

தொல்காப்பியம், நம்பியகப் பொருள் கூறியுள்ள திணைப்பொருள்களின் கருத்துக்களை ஒப்பு நோக்குகையில் முதல் நூலாகிய தொல்காப்பியத்தின் கருத்துக்களை நம்பிகப்பொருள் பின்பற்றியிருந்தாலும் ஒரு சில இடங்களில் மாறுபட்டும் காணப்படுகின்றது. மேலும் தொல்காப்பியர் கருத்துக்களை மட்டுமல்லாது தொல்காப்பிய உரையாசிரியர்களின் கருத்துக்களையும் நம்பியகப் பொருள் பின்பற்றியுள்ளது என்பதை அறியமுடிகிறது.


TRB PG TAMIL தொல்காப்பிய மெய்ப்பாடு




மெய்யில் படுவது மெய்ப்பாடு. அதாவது உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு.தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் ஒன்று மெய்ப்பாட்டியல். தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாடுகள் எட்டு. அவை தோன்றும் இடங்கள் என்று ஒவ்வொன்றும் 4 வகைகளாகப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளன. அன்றியும் 32 மெய்ப்பாடுகள் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. மெய்ப்பாடுகள் தோன்றும் இடங்களை உரையாசிரியர்கள் சுவை என்கின்றனர். இவை உடலின் மெய்ச்சுவைகள். அதாவது மெய்யுணர்வுகள். இவை அனைத்தும் புறப்பொருளில் தோன்றுவன.

இவையேயன்றிக் காதல் வாழ்க்கையில் காதலர்களிடையே தோன்றும் மெய்ப்பாடுகள் அவத்தை, அழிவில்-கூட்டம், ஒப்பு, ஒப்பின்மை என்னும் உணர்ச்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன.

  • பசி, தாகம், பாலுணர்வு, உறங்குதல், விழித்தல் முதலானவை உயிரினங்களுக்கு உள்ள பொதுவானஅகத்தெழுச்சி உணர்வுகள்.
  • சுவை, ஒளி, ஊறு, ஓசை. நாற்றம் - ஆகிய ஐந்தும் புறத்தாக்க உணர்வுகள்.
  • தொல்காப்பியம் காட்டுவன உணர்ச்சிகள் உந்திய வெளிப்பாடு.

ஒப்புநோக்குக

புறப்பொருள் மெய்ப்பாடுகள் 

மெய்ப்பாடு எட்டு. அவை நகை, அழுகை முதலானவை.
மெய்ப்பாடு தோன்றுமிடம் சுவை. சுவை என்பது உள்ளத்தில் தோன்றும் சுவை-உணர்ச்சி. அவை எள்ளல், இளமை முதலான 32, மற்றும் உடைமை, இன்புறல் முதலான 32

8 வகை 

மெய்ப்பாடு மெய்ப்பாடு தோன்றும் அகச் சுவைகள்
நகை எள்ளல்  இளமை  பேதமை   மடன் 
அழுகைஇளிவு  இழவு  அசைவு  வறுமை 
இளிவரல் மூப்பு   பிணி   வருத்தம்  மென்மை 
மருட்கை  புதுமை   பெருமை   சிறுமை  ஆக்கம் 
அச்சம்அணங்கு   விலங்கு   கள்வர்  தம்-இறை 
பெருமிதம்கல்வி  தறுகண்  புகழ்மை  கொடை 
வெகுளிஉறுப்பறை  குடிகோள்  அலை  கொலை 
உவகை செல்வம்  புலன்   புணர்வு  விளையாட்டு

அகச் சுவைகள் 32

மேலே சொல்லப்பட்ட எட்டு வகையான மெய்ப்பாடுகளின் கூறுகள் இந்த 32 மெய்ப்பாடுகள்.

உடைமை,இன்புறல்,நடுவுநிலை,அருளல்,தன்மை,அடக்கம்,வரைதல்,அன்பு,
கைம்மிகல்,நலிதல்,சூழ்ச்சி,வாழ்த்தல்,நாணுதல்,துஞ்சல்,அரற்று,கனவு,
முனிதல்,நினைதல்,வெரூஉதல்,மடிமை,கருதல்,ஆராய்ச்சி,விரைவு,உயிர்ப்பு,
கையாறு,இடுக்கண்,பொச்சாப்பு,பொறாமை,வியர்த்தல்,ஐயம்,மிகை,நடுக்கு,

அகப்பொருள் மெய்ப்பாடுகள்

அவத்தை 6 

'வினைய நிமித்தம்' எனத் தொல்காப்பியர் குறிப்பிடும் இந்த மெய்ப்பாடுகளை உரையாசிரியர்கள் 'அவத்தை' என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். தலைவன் முதன்முதலில் பார்க்கும்போது தலைவியிடம் தோன்றும் மெய்ப்பாடுகள் இவை. 

தலைவி மெய்ப்பாடு (அவத்தை) வரிசை எண்தலைவியிடம் தோன்றும் மெய்ப்பாடுமெய்ப்பாடு பற்றிய விளக்கம்
1புகு முகம் புரிதல்,
பொறி நுதல் வியர்த்தல்,
நகு நயம் மறைத்தல்,
சிதைவு பிறர்க்கு இன்மை
காதலன் பார்ப்பதைக் காதலி விரும்புதல்
காதலி நெற்றியில் வியர்வை
தான் விரும்புவதைக் காதலி மறைத்தல்
மற்றவர்களைப் பற்றி எண்ணாமை
2'கூழை விரித்தல்,
காது ஒன்று களைதல்,
ஊழ் அணி தைவரல்,
உடை பெயர்த்து உடுத்தல்,
தலைமுடியை விரித்துவிடுதல்
காதில் இருக்கும் அணிகலன் ஒன்றைக் கழற்றிப் போட்டுக்கொள்ளுதல்
அணிந்திருக்கும் அணிகலன்களைத் தடவிப் பார்த்துக்கொள்ளுதல்
காதல் உணர்வால் தளரும் ஆடையை இறுக்கி உடுத்திக்கொள்ளுதல்
3'அல்குல் தைவரல்,
அணிந்தவை திருத்தல்,
இல் வலியுறுத்தல்,
இரு கையும் எடுத்தல்,
தன் குறி உறுப்பில் தோன்றும் ஊறலால் அதனைத் தடவுதல்
அணிந்திருப்பவைகளைத் திருத்தி அழகு செய்துகொள்ளுதல்
தம் இல்லத்தார் கடிவர் எனல்
மாட்டேன் என்று கூறிக் கைகூப்பல்
4'பாராட்டு எடுத்தல்,
மடம் தப உரைத்தல்,
ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல்,
கொடுப்பவை கோடல்
தலைவனை உயர்ந்தவன் எனப் பாராட்டுதல்
பழகுவதற்குக் கூசும் தன் மடமைத் தன்மையை விட்டுவிட்டு அவனிடம் அளவளாவிப் பேசுதல்
உற்றார் உறவினர் அன்பு இல்லாமல் அலர் தூற்றுவார்களே என்று நாணுதல்
தலைவன் தரும் காதல் பரிசை ஏற்றல்
5'தெரிந்து உடம்படுதல்,
திளைப்பு வினை மறுத்தல்,
கரந்திடத்து ஒழிதல்,
கண்டவழி உவத்தல்,
அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு அவனுக்கு உடன்படல்
காதலில் திளைப்பதை மறுத்தல்
அவனைக் தேடிவரச் செய்யத் தான் மறைவிடம் ஒன்றில் தன்னை ஒளித்துத்துக்கொள்ளுதல்
அவன் தன்னைக் கண்டுபிடித்து வந்தவுடன் மகிழ்தல்
6'புறம் செயச் சிதைதல்,
புலம்பித் தோன்றல்,
கலங்கி மொழிதல்,
கையறவு உரைத்தல்,
புணர்ச்சிக்குப் பின்னர் நிகழ்வன
அவன் தன்னை ஒப்பனை செய்துவிட்டதைப் பிறர் அறியமுடியாதபடி அவன் செய்த ஒப்பனைகளை அழித்தல்
அவனோடு இருந்ததற்காகப் புலம்புவது போலத் தோற்றமளித்தல்
கலக்கத்தோடு அவனிடம் பேசுதல்
'இனி எனக்கு உன்னைத் தவிர வேறு வழி இல்லை' என்று தான் கையற்றிருக்கும் இயலா நிலையை அவனிடம் எடுத்துக் கூறுதல்

உரையாசிரியர் விரிவு

அவத்தைகள் 10 என வடநூலார் கொள்வர்.

வடநூலார் கூறும் மன்றல் என்னும் ஆண்-பெண் உறவுகள் எட்டு. அவற்றில் நடுவண் ஐந்திணைக்கண் வருவன ஆறு. இவற்றைத் தொல்காப்பியர் விளக்கினார். ஏனைய நான்கும் கைக்கிளைக்கும்பெருந்திணைக்கும் உரியன. ஒத்த காமத்து நிகழாது.

7ஏழாம் அவத்தைநாண் நீங்கிய காதல்
8எட்டாவதுதேறுதல் ஒழிந்த காமத்து மிகுதி
9ஒன்பதாவதுஉன்மத்தம்
10பத்தாவதுசாக்காடு

இந்நிகரன அவத்தை பற்றி நிகழ்ந்தனவாயின் ஏழாவது முதலாகப் பத்தாவது ஈறாகக் கூறவெனின் . ஒன்பதாவது மயக்கம்; ; ஆதலான் எனக் கூறினார் என்று கொள்க. 

மனம் அழிந்த தலைவியின் மெய்ப்பாடுகள் 

காதனுக்காகக் காத்திருக்கும்போது காதலியிடம் தோன்றும் மெய்ப்பாடுகள்

இன்பத்தை வெறுத்தல்,துன்பத்துப் புலம்பல்,எதிர் பெய்து பரிதல்,ஏதம் ஆய்தல்,பசி அட நிற்றல்,
பசலை பாய்தல்,உண்டியின் குறைதல்,உடம்பு நனி சுருங்கல்,கண் துயில் மறுத்தல்,கனவொடு மயங்கல்,
பொய்யாக் கோடல்,மெய்யே என்றல்,ஐயம் செய்தல்,அவன் தமர் உவத்தல்,அறன் அளித்து உரைத்தல்,
ஆங்கு நெஞ்சு அழிதல்,எம் மெய் ஆயினும் ஒப்புமை கோடல்,ஒப்புவழி உவத்தல்,உறு பெயர் கேட்டல்,(நலத் தக நாடின்) கலக்கம்

மனம் அழியாத் தலைவியின் மெய்ப்பாடுகள் 8

இது திருமணத்துக்கு முற்பட்ட வாழ்க்கையில் தோன்றும் மெய்ப்பாடுகள் என்றும், திருமணத்துக்குப் பிற்பட்ட வாழ்க்கையில் தோன்றும் மெய்ப்பாடுகள் என்றும் இருவகையாக்கித் தொகுக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு முந்திய களவு வாழ்க்கையில் தோன்றுவன

தலைவன் மனம் அழியக்கூடாது என நடந்துகொள்ளும் தலைவியிடம் தோன்றும் மெய்ப்பாடுகள் 'அழிவில் கூட்டம்' எனப்படும்.

  1. முட்டுவயின் கழறல்,
  2. முனிவு மெய்ந் நிறுத்தல்,
  3. அச்சத்தின் அகறல்,
  4. அவன் புணர்வு மறுத்தல்,
  5. தூது முனிவு இன்மை,
  6. துஞ்சிச் சேர்தல்,
  7. காதல் கைம்மிகல்,
  8. கட்டுரை இன்மை,

திருமணத்துக்குப் பின்னர் கற்பு வாழ்க்கையில் தோன்றுவன - 10 

  1. தெய்வம் அஞ்சல்,
  2. புரை அறம் தெளிதல்,
  3. இல்லது காய்தல்,
  4. உள்ளது உவர்த்தல்,
  5. புணர்ந்துழி உண்மை,
  6. பொழுது மறுப்பு ஆக்கம்,
  7. அருள் மிக உடைமை,
  8. அன்பு தொக நிற்றல்,
  9. பிரிவு ஆற்றாமை,
  10. மறைந்தவை உரைத்தல் புறஞ்சொல் மாணாக் கிளவி

வாழ்வியல் மனநிலை

இது திருமணத்துக்கு முன்னர், திருமணத்துக்குப் பின்னர் என்னும் இரண்டு கோணங்களில் நோக்கப்பட்டுள்ளது.

மணப்போர் ஒப்புமை [50]

வாழ்க்கையில் இணையும் ஆண் பெண் இங்குக் காட்டப்பட்டுள்ள 10 நிலைகளில் ஒத்தவர்களாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பர்.

ஒப்புவிளக்கம்
பிறப்புஆண், பெண் என்னும் பிறப்பு [51]
குடிமைஆயர், வேட்டுவர் போன்ற ஒத்த குடி
ஆண்மைஆண்மை, பெண்மை உணர்வுகள் ஒத்திருத்தல்
ஆண்டுபெண் மூத்தவளாக இல்லாமை, ஆண் கிழவனாக இல்லாமை
உருவுஒருவரை ஒருவர் கவரும் கட்டழகு
நிறுத்த காம வாயில்ஒத்த காம உணர்வுகள் உள்ளவர்களாக இருக்க வேண்டும். 
நிறைஒருவரை ஒருவர் விரும்பும் நிறைந்த உள்ளம் 
அருள்தவறுகள் நேரும்போது பெருந்தன்மையுடன் ஒத்துப்போகும் அருளுடைமை இருவருக்கும் இருத்தல் வேண்டும்
உணர்வுஈகை முதலான உணர்வுகள் ஒத்திருத்தல்
திருஒத்த செல்வ வளம் 

மணந்தோரிடம் தோன்றாமல் இருக்க வேண்டியவை 

நிம்பிரிபொறாமை அல்லது நச்சரித்தல்
கொடுமைமற்றவரைக் கொடுமைப்படுத்துதல்
வியப்புமற்றவரை வியவாமை
புறமொழிபிறரிடமோ, பிறரைப் பற்றியோ கோள் மூட்டக்கூடாது
வன்சொல்திட்டக்கூடாது
பொச்சாப்புசோர்வால் நேரும் மறதி கூடாது
மடிமைசோம்பல் கூடாது
குடிமை இன்புறல்ஒருவர் மற்றொருவர் குடியைத் தழுவுதலில் இன்பம் காணவேண்டும்
ஏழைமைஏழைமை உணர்வு கூடாது
மறப்புமற்றவர் உதவியை மறத்தல் ஆகாது