திங்கள், 31 ஆகஸ்ட், 2015

TRB PG TAMIL கம்பராமாயணம்

 கம்பராமாயணம் 
 

வடமொழி வால்மீகி இராமாயணத்தைத் தழுவி இயற்றப்பட்ட நூல் கம்பராமாயணம். இயற்றியவர் கம்பர்.
 

'தமிழிலுள்ள இலக்கியங்களில், வேறு உலக மொழிகளில் உள்ள ஒப்பரிய இலக்கியங்களோடு ஒருங்கு வைத்து எண்ணத்தகும் பெருமையது கம்ப இராமாயணமே.  ஹோமரின் இலியத் (கிரேக்கம்) வர்ஜிலின் ஈனியட், ஆடிசி (லத்தீன்), மில்டனின் சுவர்க்கநீக்கம் (ஆங்கிலம்) போன்றவற்றோடு நிகராக விளங்கும் திறம் மிக்கது கம்பராமாயணமே' என்கிறார் மது.ச. விமலானந்தம். 'கம்பன் காவியம் தமிழரது கவித்துவத்தின் பேரெல்லை' என்கிறார் வையாபுரிப்பிள்ளை. தமிழிலக்கியத்தில் இது மிகப்பெரிய நூல். பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் 6 காண்டங்கள், 113 படலங்கள், 10569 விருத்தப்பாக்களைக் கொண்டது கம்பராமாயணம். கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்.
 

  கம்பர்
 

'கவிச்சக்ரவர்த்தி' எனப் போற்றப்பட்ட கம்பர் சோழநாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர். காலம் 9ஆம் நூற்றாண்டு, 12ஆம் நூற்றாண்டு என இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.   அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 1000 பாடல்களுக்கு ஒருமுறை சடையப்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார் கம்பர்.
 

கம்பராமாயணம் தவிர, ஏர் எழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி ஆகிய பிற நூல்களையும் கம்பர் இயற்றியுள்ளார்.  'கல்வியிற் பெரியவர் கம்பர்',  'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' ஆகிய தொடர்கள் கம்பரின் கவித்திறத்தை விளக்குபவை. 
 

  கம்பராமாயணத்தின் சிறப்புகள்
 

கம்பராமாயணம் கதை அமைப்பிலும் கவிதை நயத்திலும் கற்பனை வளத்திலும் நாடகத்திறனிலும் காப்பியப் பாங்கிலும் சிறந்து விளங்குகிறது. 'கம்பசித்திரம்', 'கம்ப நாடகம்' என்று இதன் கவிச்சிறப்பு போற்றப்படுகிறது.
 

கம்பராமாயணக் கதை அமைப்பில் இழையோடும் அறக்கருத்துகள் பலவாகும்.
 

1. ஒருவனுக்கு ஒருத்தி, 2. கற்பின் திறம், 3. பிறன் மனை விழையாமை, 4. பொருந்தாக் காமத்தின் தீமை, 5. பெரியோர் சொல் கேட்டல், 6. சகோதரத்துவம், 7. தொண்டின் சிறப்பு ஆகியவை இராமன், சீதை, இராவணன், சூர்பனகை, பரதன், இலக்குவன், குகன், அனுமன் ஆகியோர் வாயிலாக உலகிற்கு உணர்த்தப்படுகின்றன.
 

தன்னிகரில்லாத தலைவனான இராமனின் பண்புகள் காப்பியம் முழுவதும் பேசப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகச் சில :
 

இராமன் காடேக வேண்டும் என்னும் கொடுஞ்சொல்லைத் தசரதன் சொன்னதாகக் கைகேயி இராமனிடம் கூறுகிறாள். தசரதன் கட்டளைப்படி பட்டமேற்க வேண்டிய நிலையில், இச்சொல்லைக் கேட்ட இராமன் முகத் தோற்றம் எப்படி இருந்தது என்பதைக் கம்பர் கூறுகிறார். சாந்தமும் சமநிலையும் துன்பங்களைப் பொருட்படுத்தாத உரமும் இராமன் பண்புகள் அல்லவா! கைகேயியின் கொடுஞ்சொல் கேட்டபோதும் இராமனின் தாமரைமுகம் மாறவில்லை; வாடவில்லை; அன்றலர்ந்த செந்தாமரையினை வென்றிருந்தது.
 

இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்
ஒப்பதே முன்பு பின்பு அவ் வாசகம் உணரக்கேட்ட
அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா.

 

(கம்ப. 1602)
 

இராமனின் இந்தச் சமநிலைத்தன்மை சீதையின் உணர்வு வாயிலாகவும் வெளிப்படுவதைக் காணலாம்.
 

'மெய்த் திருப்பதம் மேவு' என்ற போதினும்
'இத்திருத் துறந்து ஏகு' என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.

 

(கம்ப. 5088)
 

இந்தச் சமநிலைத்தன்மை வேறு எந்தக் காப்பியத் தலைவனிடமும் காணமுடியாத தனிச்சிறப்பாகும்.
 

கம்பராமாயணத்தின் எதிர்நிலைத் தலைவன் இராவணன்  -  இலங்கை அரசன்.  இராமனுக்கு இணையான வலிமையும் வீரமும் பொருந்திய இராவணனின் பெருமையையும் பெண்ணாசையால் அவன் அவற்றை இழந்த சிறுமையையும் ஒரே பாடலில் உணர்த்தி விடுகிறார் கம்பர்.
 

வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்ததோளும்
நாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்தவாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங் கையே மீண்டு போனான்.

 

(கம்ப. 7272)
 

கம்பரின் காப்பியச் சிறப்பிற்கு ஒரு மிகச்சிறந்த அடிப்படை கம்பரின் பாத்திரப் படைப்பு ஆகும். நூற்றுக்கணக்கான பாத்திரங்கள், வெவ்வேறு பண்பியல்புகள், முரண்பட்ட மனநிலைகள், மானிடர், குரக்கினத்தார், அரக்கர், பறவை எனும் பல்வேறு வகையினர், அவர்களின் இன்ப, துன்பச் சூழல்கள், அச்சூழல்களால் தூண்டப்பட்டு அவர்கள் எதிர்வினை புரியும் முறைகள் என விரியும் ஒரு மிகப்பரந்த படைப்பு விரிவில் கம்பர் ஊடும் பாவுமாக இயங்கிப் பின்னிய மாபெரும் காப்பியமே கம்பராமாயணம். அவ்வளவு பாத்திரங்களோடும் உறவாடி,   அவர்களேயாகி,   அவர்களுக்குள் நின்று அவர்களுக்கு எதிராகவும் ஆகிக் காப்பியத்தின் அடிப்படை நோக்கமாகிய 'அறம் வெல்லும் பாவம் தோற்கும்' என்ற முடிப்பை நோக்கி அவர்களை நகர்த்திச் செல்லும் திறத்தினைக் காப்பியத்தினுள் நுழைந்து காண்போர் நன்குணரலாம்.  மானுடப் பண்புகளையெல்லாம் நுணுகி நுணுகி ஆராய்ந்து எடுத்துக்காட்டிய மாட்சி கண்டுதான் பாரதி கம்பனைக் 'கம்பன் என்றொரு மானிடன்'  எனப் பாராட்டினார்;  மானுடத்தை முழுதறிந்த மானிடனாகக் கண்டார்.
 

தன்னலமற்ற தொண்டிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவன் அனுமன் என்றால் தன்னைத் தேடி வந்த அரச பதவியையும் துறந்த பண்பாளன் பரதன். அவனுடைய பற்றற்ற தன்மையை உணர்ந்த குகன், ஆயிரம் இராமர்கள் உனக்குச் சமமாக ஆவாரோ? எனப் புகழ்கின்றான். ஒரு பாத்திரத்தின் தன்மையை மற்றொரு பாத்திரம் வாயிலாக உணர்த்தும் காப்பிய உத்திக்குப் பின்வரும் பாடல் சான்றாகும்.
 

தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
'தீவினை' என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!

(கம்ப. 2337)


 

  கவித்திறன்
 

கம்பர் இராமாயணத்தை இயற்றுவதற்கு எடுத்துக்கொண்ட பாவகை விருத்தப்பாவாகும். சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் கையாளப்பட்ட விருத்தப்பா,     சீவகசிந்தாமணியில் திருத்தக்கதேவரால் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுச் சிறப்புப் பெற்றது.  ஆனால் விருத்தப்பாவின் புகழை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றவர் கம்பர். 'கவிச் சக்ரவர்த்தி' எனப் போற்றப்படும் அளவிற்கு விருத்தப்பாவினைக் கையாண்ட கம்பருக்குப் பிறகு எழுந்த அனைத்துக் காப்பியங்களிலும் விருத்தாப்பாவையே கவிஞர்கள் பயன்படுத்தினர் எனலாம். 
 

'கம்பன் கவியே கவி' என அறிஞர் போற்றும் கவித்திறன் கம்பரின் தனித்திறன். கதை நிகழ்ச்சிக்கும், பாத்திரங்களின் சூழலுக்கும் ஏற்பச் சந்த நயத்தோடு அமைந்த பாடல்கள் ஆயிரம் ஆயிரம். அறுபதுக்கும் மேற்பட்ட ஒலி நயங்களை அமைத்துப் பாடிய கம்பர் 'சந்தவேந்தன்' எனப் புகழப்பட்டார்.
 

இலட்சிய நாடாகக் கோசல நாட்டைக் காட்டும் 'வண்மையில்லை ஓர் வறுமையின்மையால்' என்ற பாடலும் அழகிய பெண்ணுருவம் கொண்டு சூர்ப்பனகை அசைந்துவரும் அழகை மெல்லோசைகளால் எடுத்துரைக்கும் 'பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்'  எனும் பாடலும் குகன் சீற்றத்தை வெளிப்படுத்தும் 'ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?' எனும் பாடலும், மருத நில மாட்சியைக் கூறும் 'தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந்தாங்க'  எனும் பாடலும் சந்த நயம் மிகுந்த பாடல்களுக்குச் சான்று அளிக்கின்றன.
 

ஒரு நிகழ்வின் இயல்பு, அழகு, அது தரும் பாதிப்பு, நிகழ்த்தும் பாத்திரத்தின் சொல்லமுடியாத அழகு - இவை எல்லாவற்றையும் கம்பர் கருத்தமைவால் மட்டுமன்றிக் கவிதையின் ஓசை(சந்த) அமைவாலும் காட்டவல்லவர். அதாவது ஏட்டில் படிப்பவனுக்கும், அதைக் காதில் கேட்பவனுக்கும் அவர்கள் மனத்தில் ஒரேவிதமான வண்ணச் சித்திரம் உருவாகி,  அவர்கள் புது உலகுக்கு இடம்பெயர்வர்.  இத்தகைய உன்னத ஆற்றலைச் சீதை மணமண்டபத்துக்கு வரும் நிகழ்வைக் கூறும் கம்பர்கவியில் காணலாம்.
 

பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதிசீதம்
மின்னின் எழில் அன்னவள்தன் மேனி ஒளிமான,
அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்

 

(கம்ப. 1144)
 

  உவமைச் சிறப்பு
 

கம்பரின் உவமைகள் தனித்தன்மை வாய்ந்தவை.  கூர்மையானவை.  கவிதையின் உட்பொருளைக் கண்முன் காண்பதற்கும், மனத்தால் உணர்வதற்கும் ஏற்ற பல உவமைகளைக் கம்பராமாயணம் முழுவதும் காணமுடிகிறது.
 

இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்
துன்ன அருங் கொடுமனக் கூனி தோன்றினாள்

 

எனக் கூனியின் வருகையும்,
 

கல் மருங்கு எழுந்து என்றும் ஓர்துளி வரக் காணா
நல் மருந்துபோல் நலன்உற உணங்கிய நங்கை

 

எனச் சீதையின் உடல், மனம் இரண்டும் வாடிய தன்மையும் உவமைகளால் உணர்த்தப்படுகின்றன.
 

விசுவாமித்திரர் இராமனைத் தன்னுடன் அனுப்புமாறு கேட்கும்போது மகனைப் பிரிய மனமில்லாத தயரதன் நிலைமையை எடுத்துரைக்கும் பாடல் உவமையின் உச்சம் என்றே போற்றப்படுகிறது. பிறவியிலேயே கண்ணில்லாத ஒருவன் திடீரென்று கண்ணைப் பெற்று,  உடனே மீண்டும் பார்வை இழந்தால் எவ்வாறு அதிர்ந்து துன்புறுவானோ அதைப்போலக் கடுந்துயரம் கொண்டான் தயரதன் என்பதைக் கம்பர் கூறும்விதம் காணுங்கள்.
 

எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தின் 

 

எறிவேல் பாய்ந்த 

 

புண்ணிலாம் பெரும்புழையில் கனல்நுழைந்தால் எனச்செவியில் 

 

புகுத லோடும் 

 

உண்ணிலா வியதுயரம் பிடித்துந்த ஆருயிர்நின் 

 

நூசலாடக் 

 

கண்ணிலான் பெற்றிழந்தான் எனவுழந்தான் கடுந்துயரம் 

 

கால வேலான்.
 

(கம்ப.328)
 

கண்ணிழந்தான் பெற்றிழந்தான் - என்பது மிக அரிய உவமை. 'துயரம் உந்த ஆருயிர்நின்று ஊசலாட' என்பதில் தசரதன் உள்ளத்துள் நிகழும் மன-உயிர்ப் போராட்டம் காட்சியாகவே விரியும் ஒரு புதுமையான படிமத்தைக் காண்கிறோம். 
 

காலத்தால் அழியாத காப்பியம் கம்பராமாயணம்,  ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுச்சுவை இன்பம் பயப்பது. 'கம்பன் பிறந்த தமிழ்நாடு' என, பாரதி பெருமையோடு கம்பரைப் புகழக் காரணமாக அமைந்த காப்பியமாகத் திகழ்கிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக