தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சாமானிய மனிதரின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவும் ஆபத்தானது என நீதிபதிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்தனர்.

மேலும், கடந்த 2005-ம் ஆண்டு உத்தரவுப்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்க தடை நீடிக்கும் எனத் தெரிவித்தனர்.

வழக்கு பின்னணி:

டெல்லியைச் சேர்ந்த 6 மாத குழந்தைகளான அர்ஜுன் கோயல், அவுரவ் பண்டாரி மற்றும் 14 மாத குழந்தையான ஜோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் அவர்களது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில், தீபாவளி, தசரா பண்டிகைகளின்போது அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்படும் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. உலகில் அதிக மாசு ஏற்படும் நகரமாக கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி பட்டியலிடப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் இன்னும் வளராத நிலையில் உள்ள எங்களுக்கு இதுபோன்ற பட்டாசுகளின் வெடிச் சத்தத்தால் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் இருமல், நுரையீரல் நோய்களுக்கும் பட்டாசு புகை மூலம் ஏற்படும் மாசு காரணமாக அமைகிறது. சுவாச கோளாறு இருப்பவர்களுக்கு இதன்மூலம் நோய் அதிகரிக்கிறது. பெங்களூரு நகரில் 2013-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, தீபாவளி பண்டிகையின்போது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 32 சதவீதம் மாசு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது, சுவாசக் கோளாறு நோய் பாதிப்பு 40 சதவீதம் அதிகரிப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தீபாவளி பண்டிகையின்போது, மாசு ஏற்படாமல் தடுக்க பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிபதிகள் கருத்து:

இந்த வழக்கு இன்று அவசர வழக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "தீபாவளி பண்டிக்கைக்கு பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது. இருப்பினும், கடந்த 2005-ம் ஆண்டு உத்தரவுப்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்க தடை நீடிக்கும். தெரிவித்துள்ளது. சாமான்ய மனிதனின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவும் ஆபத்தானது. பட்டாசு வெடிக்கக்கூடாது எனத் தடை விதித்தால், 'அது என் உரிமை' என எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள். அத்தகைய சூழல் உருவானால் பெரும் குழப்பம் ஏற்படும்." எனத் தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டும். பொதுவாக ஓர் இடம் தேர்வு செய்து அங்கு அனைவரும் பட்டாசுகளை வெடிக்கலாம் என உத்தரவிடலாம்" எனக் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு தலைமை நீதிபதி தத்து, "அது நடைமுறை சாத்தியமற்றது. பட்டாசு வெடிக்க வேண்டுமானால் அனைவரும் நேரு மைதானத்துக்கு வாருங்கள் என உத்தரவிடமுடியாது" என்றார்.