தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக களமிறங்கும் மக்கள் நலக் கூட்டு இயக்கம் வெளியிட்டுள்ள 37 பக்கங்களைக் கொண்ட குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையில் 24 தலைப்புகளில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியில் மக்கள் நலக் கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில், மமக சமீபத்தில் வெளியேறியது. மற்ற 4 கட்சிகளும் தொடர்ந்து கூட்டியக்கத்தில் உள்ளன.

கூட்டியக்கத்தின் தேர்தல் அணுகுமுறை குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் மதிமுக தலைமை அலுவலகமான சென்னை தாயகத்தில் இன்று நடந்தது. இதில், கூட்டியக்கத்தின் குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் வெளியிட்டனர். அதன் முக்கிய அம்சங்கள்:

மத்திய அரசுக்கு எதிராக...

உலகமய, தாராளமய, தனியார்மய பொருளாதார கொள்கைகள் தமிழ்நாட்டிலும் மக்கள் வாழ்விலும், மாநில நலனிலும் நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸ் அரசால் நிறைவேற்றப்பட்ட இக்கொள்கைகளை நரேந்திர மோடி அரசும் தீவிரமாக அமலாக்கி வருகிறது. இந்திய இறையாண்மைக்கும், மக்கள் நலனுக்கும் விரோதமாக பாஜக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இக்கொள்கைகளை எதிர்த்து வலுமிக்க போராட்டங்களை மக்கள் நலக் கூட்டியக்கம் முன்னெடுத்துச் செல்லும்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்தவும், நாட்டின் உற்பத்தித் தொழில்துறை வளர்ச்சிக்கு வழிகாணாமல், பங்குச்சந்தை சார்ந்த பொருளாதாரமாக மாற்றப்பட்டு வருவதை எதிர்த்தும் போராடுவோம். தொழில்துறையிலும், நிதித்துறையிலும், பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்தவும், கருப்பு பணத்தை முற்றாக பறிமுதல் செய்திட வலியுறுத்துவோம்,

வேளாண்மை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளுக்கு மானியங்களை வெட்டிக் குறைப்பதையும், மக்கள் நலத்திட்டங்களை சுருக்குவதையும் எதிர்த்துப் போராடுவோம். மக்கள் நலன் காக்கும் மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்துவோம்.

மதச்சார்பின்மையை நிலைநாட்ட...

மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக, அரசு நிர்வாகத்தை பயன்படுத்தி மதவெறி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா அமைப்புகள் இந்திய நாட்டின் பாரம்பரிய பன்முகத் தன்மைக்கு விரோதமாக மதவெறி கருத்துக்களை பரப்பி மதக் கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி வருகின்றன. பசுவதைத் தடை என்ற பெயரில் மாட்டிறைச்சியை மையப்படுத்தி படுகொலைகளும், பதற்றமும் உருவாக்கப்படுகிறது. சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உருவாகியுள்ளது.

சமூகத்தில் பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி படுகொலைகள் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அதிர்ச்சிகரமான தாக்குதல்களாக அமைந்துள்ளன. மதவெறி இந்துத்துவ சக்திகளை எதிர்த்து வலுவான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம். மக்கள் ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்வது, அனைத்து மதங்களை சார்ந்த மக்களும் சகோதரத்துவத்துடன் இணைந்து வாழும் மாநிலமாக தமிழகத்தை திகழச் செய்து மதச்சார்பின்மையினை நிலைநாட்டுவோம்.

அறிவியல் பூர்வமான, முற்போக்கு பகுத்தறிவு கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதுடன் கருத்துச் சுதந்திரத்தையும், படைப்பாளிகளையும் பாதுகாப்போம். சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்துவோம். மதத்தின் பெயரால் உருவாக்கப்படும் எவ்வித மதத்தீவிரவாதமும் நாட்டை சீரழித்து விடும் என்பதால் அவற்றை முளையிலேயே கிள்ளி எறிவோம்.

சாதி அரசியலுக்கு எதிராக...

தமிழகத்தில் அரசியல் ஆதாயத்திற்காக சாதி வெறி சக்திகள் சாதிய மோதல்களை திட்டமிட்டு நடத்தி வருகின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்கின்றன. சாதி மறுப்பு திருமணங்கள், காதல் திருமணங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பகிரங்கமாக அச்சுறுத்தப்படுகின்றன.

இத்தகைய சாதிவெறி சக்திகளை எதிர்த்தும் சகோதர உணர்வை வலுப்படுத்திடவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். மேலும் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை தடுத்திட தனிச் சட்டம் நிறைவேற்றவும், சாதி மறுப்புத் திருமணங்கள் புரிந்தோர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திடவும் மத்திய அரசை வற்புறுத்துவோம். மக்களவையில் நிறைவேற்றப்பட்டு தற்போது மாநிலங்களவையில் கிடப்பில் போடப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்க வலியுறுத்துவோம்.

ஊழல் ஒழிப்பு

உயர்மட்ட ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் இயற்றுவோம். கிராம ஊராட்சி முதல் தலைமைச் செயலகம் வரை ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை உத்தரவாதம் செய்வோம்.

வெளிப்படையான அரசு நிர்வாகம்

* நேர்மையான நிர்வாகம், விரைவான, நிறைவான மக்கள் சேவையை உறுதிப்படுத்த சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவோம். அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையும், அரசியல் தலையீட்டை அறவே தடுப்பதும் உறுதி செய்யப்படும். அரசை தேடி மக்கள் என்பதற்கு மாறாக, மக்களை நாடி அரசு என்ற வகையில் நிர்வாக அமைப்பில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்,

* சட்டமன்ற ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவோம். சட்டமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுவதோடு சட்டமன்ற விவாதக் குறிப்புகள் அனைத்தும் வலைதளத்தில் வெளியிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

* சமூக விரோத கும்பல் போலி ஆவணங்கள் மூலம் வீடு, மனை, நிலங்களை கைப்பற்றுவதை தடுக்க பத்திரப் பதிவுத் துறையில் நவீன மின்னணு தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படும்.

உள்ளாட்சி நிர்வாகம்

* உள்ளாட்சி அமைப்புகள் சுயமாக செயல்படும் வகையில் கூடுதல் நிதி மற்றும் அதிகாரம் வழங்கப்படும். உள்ளாட்சி நிர்வாகங்களில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தனியான ஆணையம் அமைக்கப்படும்.

கனிம வளம்

* ஆற்று மணல், தாது மணல், கிரானைட் முதலான கனிமவள கொள்ளைகளை தடுத்து நிறுத்திடுவோம். இதுகாறும் நடந்துள்ள கனிம கொள்ளையில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு துணைபோன அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து கனிம வள வியாபாரமும் அரசு நிர்வாகத்தின் மூலம் மக்களின் மேற்பார்வையோடு நேர்மையான முறையில் செயல்படுத்தப்படும். விவசாயிகள் சொந்த உபயோகத்திற்கு ஏரி,குளங்களில் மண் எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

சமூக நீதி

* தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை பாதுகாக்கப்படும். மேலும் தனியார் துறையில் இடஒதுக்கீட்டினை விரிவுபடுத்துவதற்கான சட்டத் திருத்தம் வலியுறுத்தப்படும். மேலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு வழங்க ஆவண செய்யப்படும்.

* சமூக நீதிக்கு எதிராக அண்மைக் காலத்தில் இந்துத்துவா சக்திகள் ஒன்று சேர்ந்து வருகின்றன. இதனைத் தடுக்க முற்போக்கு ஜனநாயக சக்திகளும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களும் சிறுபான்மை மக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அரசுத் துறைகளில் மாநில அரசு கடைபிடிக்கும் இடஒதுக்கீடு முறை பற்றிய வெள்ளையறிக்கை அவ்வப்போது வெளியிடப்படும்.

* நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.

தமிழ்மொழி வளர்ச்சி

• தாய்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும். தாய் மொழி தமிழ் பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை எண் 266 திருத்தம் செய்து தமிழ் பாடத்தை முதல் பாடமாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் கணிணி உள்ளிட்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் தாய்மொழி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளும் தாய் மொழிக் கல்வியில் ஏற்படுத்தப்படும். தமிழை பயிற்று மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* உயர் நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழி வழக்காடு மொழியாக பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாட்டுப்புற கலைகள்

நாட்டுப்புற கலைகளை பாதுகாத்திட, வளர்த்திட நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். நாட்டுப்புற கலை பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு கல்லூரிகளில் நாட்டுப்புற கலை பட்டப்படிப்பும் உருவாக்கப்படும்.

மாநில உரிமைகள்

* மத்திய - மாநில உறவுகள் சீரமைப்புக்கும், வலிமையான கூட்டாட்சி முறைக்கும், மாநில சுயாட்சி நிலை பெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநிலங்களிலிருந்து மத்திய அரசு பெறுகின்ற வரி வருவாயில் 50 விழுக்காடு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்திட குரல் கொடுப்போம்.

* தமிழ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளையும் மத்திய அரசின் நிர்வாக மொழியாக தீர்மானிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பொதுப்பட்டியல், மாநிலப் பட்டியல் இரண்டிலும் இல்லாத எஞ்சிய அதிகாரங்கள் (Residuary Power) அனைத்தையும் மாநிலங்களுக்கு வழங்கிட போராடுவோம்.

நதிநீர் பிரச்சனைகள்

தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு அமைத்திட வலியுறுத்தவும், காவிரியின் குறுக்கே மேகதாது, இராசி மணல் ஆகிய இடங்களில் தடுப்பு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* பவானி நதி மற்றும் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவும், பாலாற்றின் குறுக்கே குப்பம் பகுதியில் ஆந்திர அரசு தடுப்பு அணை கட்ட முயற்சிப்பதைத் தடுத்து நிறுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

* தென்னக நதிகளையும், மாநில ஆறுகளையும் இணைக்க உரிய முயற்சிகளை மேற்கொள்வோம். நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீரை திறந்து விடுவது மற்றும் திருநெல்வேலி மாவட்டம், செண்பகவல்லி அணையை சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

• நதிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளில் நமது உரிமைகளை அனைத்துக் கட்சியினர் ஒருங்கிணைப்போடு போராடி பெற்றிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில், அண்டை மாநிலங்களோடு பரஸ்பர நல்லுறவு கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அண்டை மாநிலங்களில் கடலில் வீணாக கலக்கும் நீரை தமிழகத்திற்கு பெறுவதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இலங்கை தமிழர்கள் பிரச்சனை

* இலங்கையில் தமிழ் மக்களின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தவும், நீதியை நிலைநாட்டவும், குற்றவாளிகள் தப்பி விடாமல் உரிய தண்டனை பெறவும் பன்னாட்டு நீதிபதிகளையும் கொண்ட நம்பகத் தன்மை வாய்ந்த நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான வடக்கு - கிழக்கு மாநிலங்களில் உள்ள கட்டாய சிங்கள குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

* தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களுக்கு நிகரான சம உரிமைகள் வழங்க வேண்டும். தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து, இலங்கை தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிலம் மீள் ஒப்படைப்பு செய்திட வேண்டும். அகதி முகாம்களில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தப்படும்.

சட்டம் - ஒழுங்கு

* தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளை முற்றாக ஒழித்து பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வது உறுதி செய்யப்படும். காவல்துறை மக்களுக்கு சேவைத்துறை என்ற நிலை உருவாக்கப்படும். பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது நடவடிக்ககை எடுக்க தவறும்பட்சத்தில் அத்தகைய காவலர்கள் மீது ஐ.பி.சி. 166 ஏ-வது பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* காவல்நிலையங்களில் அத்துமீறல்கள், சித்திரவதைகள், லாக்கப் மரணங்கள், அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. காவல்துறை அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தால் விஷ்ணுப் பிரியா என்ற டி.எஸ்.பி. தற்கொலை செய்யும் மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகைய அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படும். தவறிழைக்கும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களது ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதோடு அமைதியான போராட்டங்கள் நடத்துவோர் மீது கொடூரமான தாக்குதல் அரசின் தூண்டுதலால் நடத்தப்படுகிறது. பல நகரங்களில் போஸ்டர், தட்டிகள் வைப்பதற்கு கூட அனுமதிக்கப்படுவதில்லை. இத்தகைய செயல்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகள் பேணிப்பாதுகாத்திடவும், ஜனநாயக ரீதியான மக்கள் இயக்கங்கள், வெகுமக்கள் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கிடவும் ஆவண செய்யப்படும்.

* காவலர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை மற்றும் 8 மணி நேர வேலை உறுதி செய்யப்படும்.

ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு

* முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை பாதுகாக்கப்படும். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ள பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதையும், பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரம் உத்தரவாதம் செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு மக்கள் உரிமை போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளும் திரும்ப பெறப்படும்.

மதுவிலக்கு

* தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை செயல்படுத்த தேவையான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். "சசிபெருமாள் மது ஒழிப்பு இயக்கம்" உருவாக்கப்பட்டு மது ஒழிப்பிற்கு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். போதை ஒழிப்பிற்கான சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்படும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு தகுதிக்கேற்ற முறையில் அரசுத் துறையில் மாற்று பணி வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் மது உற்பத்தி ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு மது ஆலைகளை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாடு

* விவசாயத்தை மேம்படுத்தவும், அதை லாபகரமான தொழிலாக மாற்றவும், கிராமப்புறங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

* நெல், கரும்பு, மணிலா, பருத்தி, மரவள்ளி, ராகி, கம்பு, சோளம், மக்காச்சோளம், மஞ்சள், கொப்பரைத் தேங்காய், இரப்பர் உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களுக்கும் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் அடக்க விலையோடு 50 விழுக்காடு சேர்த்து விலை தீர்மானிக்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மற்றும் தானியங்கள் அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் முழு அளவு கொள்முதல் செய்யப்படும்.

* கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.1000 கோடி வட்டியுடன் வழங்கிட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

• இயற்கை முறை விவசாயத்திற்கு முழு மானியம் வழங்கப்படும். மரபணு மாற்று பயிர்களுக்கும், அதன் சோதனைக்கும் தடை விதிக்கப்படும். விவசாயிகளுக்கு 20 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்குவதுடன், மின்னிணைப்பு கோரியுள்ள அனைவருக்கும் மின்னிணைப்பு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பயிர்க்கடன் கோருகின்ற அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும். ஏழை, எளிய, நடுத்தர விவசாயிகளின் பயிர்க் கடன் பாக்கிகள் ரத்து செய்யப்படும். விவசாயிகள் பெற்றுள்ள நகைக் கடன்களுக்கான வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு அசலை செலுத்துபவர்களுக்கு நகைகள் திருப்பி அளிக்கப்படும்.

* ஏழை, நடுத்தர விவசாயிகளுக்கு உரம், பூச்சிமருந்து, விதை உள்ளிட்ட இடுபொருட்கள் 50 விழுக்காடு மானிய விலையில் வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் மாட்டுத் தீவணம் வழங்குவதோடு பாலுக்கு கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். ஆவின் நிறுவனம் தரம் உயர்த்தப்பட்டு உற்பத்தி செய்யப்படும் முழு அளவு பாலும் கொள்முதல் செய்யப்படும்.

* பழங்கள் - காய்கறிகள் அழுகாமல் பாதுகாத்திட குளிர்பதன நிலையங்கள் அந்தந்த பகுதியில் அமைக்கப்படும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவும், அனைத்து சாகுபடிக்கும் இதனை விரிவுபடுத்தப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* சாகுபடி பரப்பளவு குறையாமல் பாதுகாத்திட விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகவும், விவசாயம் அல்லாத பணிகளுக்கு மாற்றப்படுவதையும் தடுத்திட தேவையான சட்டம் இயற்றப்படும்.

* 1994 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை விட கொடுமையான பிரிவுகளைக் கொண்டு விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து அபகரிக்க வழிவகை செய்யும் தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள 'தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம் - 1997' ரத்து செய்யப்படும். நிலம் கையகப்படுத்துதலில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் குறையாத வகையில் புதிய அணுகுமுறை மேற்கொள்ளப்படும்.

* தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டத்தை அமலாக்கி உபரி நிலத்தையும், அரசு தரிசு நிலத்தையும் நிலமற்ற ஏழை, எளிய விவசாயத் தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் வீதம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* தமிழகத்தில் எஸ்டேட்ட நிலங்களில் நீண்ட காலமாக குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

குடியிருப்பு - மனைப்பட்டா

* கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வீட்டுமனைப் பட்டா இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும். ஏற்கனவே பல வகை புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கப்படும்.

* சொந்த வீடு இல்லாத அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் குடியிருக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உட்பட அனைத்துப் பகுதிகளிலும் வீடு கட்டுவதற்கான பெருந்திட்டம் உருவாக்கப்பட்டு வீடில்லாத அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வழங்கப்பட்டு குடிசைகள் இல்லா தமிழகம் உருவாக்கிடவும் திட்டமிடப்படும்.

* ஆண்டுக்கு ஒரு லட்சம் பசுமை வீடுகள் கட்டும் இலக்குடன், இத்திட்டத்திற்கு அரசு நிதியுதவி வீடொன்றுக்கு ரூ. 4 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சென்னை உள்ளிட்ட மாநகரங்கள், நகரங்களிலும் வாழும் குடிசைப் பகுதி மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படும்.

தொழில்வளம்

* சிறு - குறு தொழிலுக்கு முன்னுரிமை அளித்தல், கடந்த காலத்தைப் போலவே சில குறிப்பிட்ட தொழில்களின் உற்பத்தியை சிறு தொழில்களுக்காக ஒதுக்குதல், தடையற்ற மின்சாரம், இத்தொழில்களுக்கு நிரந்தரமாக உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளை பெற்றுத் தருவது போன்ற அம்சங்களை நிறைவேற்ற திட்டமிடப்படும்.

* உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெளிப்படைத் தன்மையுடன் ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மின்சாரம்

* மின் உற்பத்திக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு தமிழகத்தை மின் உபரி மாநிலமாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாதத்திற்கு 250 யூனிட் வரை உள்ள பயனாளிகளுக்கு 50 விழுக்காடு மின் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும்.

* சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்து பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த தனிநபர் வீடுகளில் அதற்கான கட்டமைப்பை உருவாக்கிட மானியத்துடன் வட்டி இல்லா கடன் வழங்கிட ஏற்பாடு செய்யப்படும்.

* மின்சார வாரியத்தில் ஊழலை ஒழித்து, நிர்வாக சீரமைப்பின் மூலம் மின்சார வாரியம் நட்டமின்றி இயங்கிட வழிவகை செய்யப்படும்.

தொழிலாளர் உரிமைகள்

* அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தப்பட்ச மாத ஊதியமாக ரூ.15,000/- வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான சட்டத் திருத்தம் இயற்றப்படும். பன்னாட்டு தொழில்நிறுவனங்களிலும் மற்றும் உள்நாட்டு பெரிய நிறுவனங்களிலும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை உத்தரவாதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* தொழிலாளர் விரோத மத்திய பாஜக அரசு இயற்ற துடிக்கும் 'சாலை பாதுகாப்பு சட்ட மசோதாவை' திரும்ப பெற உரிய முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* வேலை தேடி நகர்ப்புறங்களை நோக்கிச் செல்லும் கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள் உருவாக்கப்படும்.

கல்வி

* சமூகத்தின் உயிர் நாடியான கல்வி தனியார்மயமாக்கப்படுவதை தடுக்கவும், தனியார் கல்வி நிறுவனங்களோடு போட்டி போட்டு அரசு கல்வி நிறுவனங்கள் முன்னேறுவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும். ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழி வழி கல்விக்கு ஊக்கமளிக்கப்படும்.

* கல்வி பெறும் உரிமைச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாயக்கல்வி உரிமைச்சட்டப்படி, தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஒதுக்கீட்டை ஒற்றைச்சாளர முறையில் அரசே நிரப்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* அரசுப் பள்ளிகளில் மழலையர் பள்ளிகள் உருவாக்கப்படும். அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப்பாடத் திட்டமாக அறிவிக்கப்படும். இதற்கு தேவையான கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

* ஐஏஎஸ்/ ஐபிஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளிலும் தமிழக மாணவர் அதிக தேர்வாகும் வகையில் தரமான கல்வி வழங்கிட பாடத்திட்டத்தில் உரிய மாற்றம் செய்யப்படும். அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடத்தப்படும்.

* மழலைப் பள்ளியில் துவங்கி பிளஸ் 2 வரை தொடரும் தனியார் பள்ளிகளின் கட்டணம் மற்றும் நன்கொடைக்கொள்ளைக்கு முடிவு கட்டப்படும்.

சுகாதாரம்

* மாவட்டத்திற்கு ஒரு பன்னோக்கு மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவக்கல்லூரி துவக்கப்படும். மருத்துவப்பணியாளர்கள், மருத்துவர்கள் கிராமப்புற பணியில் ஈடுபடுவதை கட்டாயமாக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சதவிகிதம் ஏழை எளிய நோயாளிகளுக்கு கட்டணமில்லா மருத்துவ சேவை கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

• மரபு வழி மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் யுனானி உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகள் மேம்படுத்தப்படும். இதற்கென சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்படுவதுடன் மாநில அளவில் தனி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

சுற்றுச்சூழல்

* சுற்றுச்சூழல் நாசத்திற்கும், ஆறுகள் மாசு அடைவதற்கும் காரணமான சாயப்பட்டறைக் கழிவுகள், நகரக்கழிவுகள் கலந்து காவிரி, பவானி, தாமிரபரணி ஆறு, பாலாறு, அமராவதி, நொய்யல் போன்ற ஆறுகள் நஞ்சாவதைத் தடுக்க சிறப்பு முன்னுரிமை திட்டங்கள் நிறைவேற்றப்படும். தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் நாசகார நச்சாலை நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும்.

* பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீர் வணிகத்திற்காகவும், மென்பானங்கள் தயாரிப்புக்கும், நிலத்தடி நீர், ஆற்று நீர் உறிஞ்சப்படுவதைத் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* சுற்றுச் சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் அதிக கேடு விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்கள் முற்றாக அழித்திட சிறப்புத் திட்டம் வகுக்கப்படும்.

* அண்டை மாநிலங்களிலிருந்து மருத்துவக் கழிவுகளும், மின்னனுக்கழிவுகளும், இதர கழிவுகளும் தமிழக எல்லையில் கொட்டப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வேலைவாய்ப்பு

* அரசுத்துறையில் சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, காவல்துறை என காலியாக உள்ள சுமார் 2 லட்சம் பணியிடங்களும் அந்தந்த தேர்வு வாரியங்கள் மூலமும், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், ஊழலற்ற நேர்மையான முறையில் நிரப்ப ஆவண செய்யப்படும்.

மற்றவை

* உச்ச நீதிமன்ற வழக்கு விரைவில் முடிக்கப்பட்டு சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்.

* தமிழ்வழிக் கல்வி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்டு அனைத்து தேர்வு வாரியங்களிலும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

* வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை அடையாளம் காண்பதில் கடந்த காலத்தில் பல கோளாறுகள் நிகழ்ந்துள்ளள. எனவே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை முறையாக அடையாளம் கண்டு அவர்களுக்கான நலத்திட்டங்கள் உருவாக்கப்படும்.

* ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரருக்கு மாதம் 30 கிலோ தரமான விலையில்லா அரிசி வழங்குவதோடு, பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை தட்டுப்பாடின்றி வழங்கப்படும். பொருட்கள் அனைத்தும் பாக்கெட் முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

• கிராமப்புற, நகர்ப்புறங்களில் ஏழை முதியோருக்கான ஓய்வூதியம் ரூ.3,000/-மாக வழங்கப்படுவதுடன், ஓய்ñதியம் வழங்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் வழங்கப்படும். முதியோர்களுக்கு இலவச பேருந்து சலுகை வழங்கப்படும்.

* விதவைகள், மாற்றுத் திறனாளிகள், முதிர்கன்னிகள் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு மாத ஓய்வூதியமாக ரூ.3,000/- உயர்த்தி வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களுடைய ஊனத்திற்கு ஏற்ப ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்.

* கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் வேலை நாட்களும் ஊதியமும் உயர்த்தப்படும். சிறு, குறு விவசாயிகளின் சாகுபடிக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்திட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

* கிராமப்புற வேலை உறுதி திட்டத்தைப் போல் நகர்ப்புற ஏழைகளுக்கு 'நகர்ப்புற வேலை உறுதித் திட்டம்' உருவாக்கப்பட்டு வேலையளிக்க மத்திய அரசை வற்புறுத்துவோம். ஊழல் முறைகேடின்றி இத்திட்டத்தை அமலாக்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* தமிழகத்தில் பல வடிவங்களில் நீடித்து வரும் தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்திட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சாதி வேறுபாடின்றி வழிபடும் உரிமை நிலைநாட்டப்படும்.

* தீண்டாமை கடைபிடிப்போர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் மூலம் உறுதியான நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றமிழைத்தோருக்கு தண்டனை வழங்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு புகார் அளித்தவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.

* அரசு ஒப்பந்தங்கள் மற்றும் குத்தகைகளில் தலித் மக்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கப்படும்.

* மனித மலத்தை மனிதன் சுமக்கும் அவல நிலை அறவே ஒழிக்கப்படும். கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதி, நகர்ப்புறங்களில் வடிகால் வசதி மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த ஆவன செய்யப்படும்.

* கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* கர்ப்பிணி பெண்களுக்கான உதவி நிதி ரூ.20,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். திருமண உதவித் தொகை அனைவருக்கும் ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

மீனவர் நலன்

* இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாவதையும், படகுகள் உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறித்துச் செல்வதையும் தடுத்து, இந்நிகழ்வுகள் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

சிறுபான்மையினர் நலன்

* அனைத்து மத சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாத்திட அரசியல் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம். மதம் மாறிய தலித் மக்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள், சலுகைகள் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் தூண்டி வரும் மத வன்முறைகளை ஒடுக்கவும், வெறுப்பு பிரச்சாரங்களை தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் நலன்

• ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி மத்திய அரசு வழங்கியுள்ள ஊதியம் மற்றும் அனைத்து படிகளையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊதிய முரண்பாடுகள் தீர்க்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியிட மாறுதல் எவ்வித முறைகேட்டிற்கு இடமின்றி கலந்தாய்வு அடிப்படையில் நிறைவேற்றப்படும்.

தேர்தல் சீர்திருத்தம்

* ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் பண ஆதிக்கம் தேர்தலில் ஒழிக்கப்பட்டு ஜனநாயக அடிப்படையில் மக்கள் வாக்களிப்பதை உறுதி செய்வதுடன் அனைவரும் வாக்குரிமையை பயன்படுத்திட வழிவகை காணப்படும். அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றவர் என்ற தற்போதைய தேர்தல் முறை மட்டுமின்றி அனைத்து வாக்காளர்களது வாக்குகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் பொருத்தமான அம்சங்களுடன் தேர்தல் சீர்திருத்தம் செய்ய வலியுறுத்துவோம்.

* நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு நிறைவேற்ற போராடுவோம்.

* விலைவாசி உயர்வுக்கும், பதுக்கலுக்கும் காரணமாக இருக்கும் இணையதள வர்த்தகம் (Online Trading), ஊக வணிகம் (Future Trading) ஆகியவை தடுத்து நிறுத்தப்படும். பதுக்கல்காரர்கள் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கத் தடை விதிக்கவும், உள்நாட்டு பெரு நிறுவனங்களின் தலையீட்டை முறைப்படுத்தவும் உரிய முயற்சிகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

* விண்ணப்பித்து காத்திருக்கும் தகுதியுள்ளவர்கள் அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டுகள் தாமதமின்றி வழங்கப்படும்.

* தமிழகத்தின் தென்பகுதியில் ஒரு மத்திய அறிவியல் தொழில் நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்.

* தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்பு கட்டாயமாக்கப்படும்.

* நான்கு வழி நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண வசூல் மையங்களை நீக்க தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பேருந்து பாஸ் வழங்கப்படும்.

• மதுரை, கோவை, திருச்சி ஆகிய பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில் சேவை துவக்கிட செயல்திட்டம் வகுக்கப்படும்.

இவ்வாறு மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் குறைந்தபட்ச செயல்திட்டம் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.