திங்கள், 5 டிசம்பர், 2016

பெருங்கதை

பெருங்கதை
வேறு எந்தத் தமிழ்க் காப்பியத்திற்கும் இல்லாத தனிச் சிறப்புப் பெருங்கதைக்கு உண்டு என்று அறிஞர் கருதுவர். இது பலவகைக் கருவிகள், பழக்க வழக்கங்கள், கட்டட அமைப்புகள், விளையாட்டுகள் பற்றிய சமுதாயச் செய்திகளை எல்லாம் நுட்பமாகப் பேசும் ஒரு காப்பியம்.


பெருங்கதை பற்றிப் பழைய உரையாசிரியர்கள் பலர் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இக்காப்பியத்தைப் பாராட்டி உள்ளார். "கபாடபுரத்தில் இருந்த இடைச் சங்கத்தில் இயற்றப்பட்டவை கலியும் குருகும் வெண்டாளியும் முதலிய செய்யுள் இலக்கியங்கள்; இந்த இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்து செய்ததே உதயணன் கதை" என்று அவர் கூறியுள்ளார் (உதயணன் கதை - பெருங்கதை). பேராசிரியர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர். தொன்மை முதலிய இலக்கணக் கூறுகளை விளக்கும் இவர் இயைபு என்ற இலக்கணத்தை விளக்கி, அதற்குச் சான்றுகளாகச் சீத்தலைச் சாத்தனாரால் செய்யப்பட்ட மணிமேகலையையும், கொங்குவேளிரால் செய்யப்பட்ட இந்தப் பெருங்கதையையும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களே அன்றி நச்சினார்க்கினியர், மயிலை நாதர், நேமிநாத உரையாசிரியர், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், வீரசோழிய உரையாசிரியர் முதலியோர் உரைகளிலும் பெருங்கதை மேற்கோளாக இடம் பெற்றுள்ளது. இத்தகைய பெருமை பெற்ற பெருங்கதை, உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கையை விவரித்துச் செல்கிறது. இக்காப்பியத்தை இயற்றிய கொங்குவேளிர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். எனவே இக்காப்பியம் சமணக் கொள்கைகளை மிகுதியும் முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக